
தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்திருந்தார்.
இதுகுறித்து வெளியான தகவலில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதேநேரம் தற்பொழுது அதிமுகவில் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும், திரைமறைவில் இந்த சந்திப்பு நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமா என்ற கேள்விக்கு 'பாஜக கிஜக என எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி குறித்த தகவல்கள் இன்னும் ஆறு மாத காலத்திற்கு பின்னர் தெரியவரும். நாங்களே செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணி குறித்து தெரிவிப்போம்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இன்று மாலை டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சட்டப்பேரவையில் நகராட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் அதில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றுள்ளார். அதை முடித்துக் கொண்டு இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அண்மையில் நடைபெற்ற ஜக்கியின் சிவராத்திரி விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதே நிகழ்வில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி நெருக்கம் காட்டிய பின்னரே மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்துக்கள் எழுந்தது. இந்நிலையில் எடப்பாடியை பின் தொடர்ந்து இன்று மாலையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் டெல்லி செல்வது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.