EPS on Ministers Severe criticism

அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் கடந்த 17ஆம் தேதி (17.01.2025) அதிமுக மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி அதிமுக சார்பில் சென்னையில் உள்ள கண்ணகி நகரில் எம்ஜிஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் 18ஆம் தேதி (18.01.2025) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது” எனப் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும் - அமைதிப்படை படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் அமாவாசை கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது எனப் பேசியிருக்கிறார். ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.

இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23ஆம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பௌர்ணமிகளுக்கு மு.க. ஸ்டாலின் தான் முதலமைச்சராகத் தொடர்வார் என்பதை 2026இல் உணர்ந்து கொள்வார்” எனப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தான் அமைதிப்படை அமாவாசை கேரக்டர் என்பது பொருத்தமாகும். அவருக்குப் பொருத்தமான பெயரை அவரே தேடிக்கொண்டார்.

Advertisment

ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் செந்தில் பாலாஜி. தற்போது திமுகவில் உள்ளார் அடுத்து எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளில் இரண்டு கட்சி சின்னத்தில் நின்று போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி தான். அதாவது ஐந்தாண்டுகளில் ஒரு முறை இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு முறை உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய மனிதர்தான் செந்தில் பாலாஜி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது சட்டமன்றத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞரை பற்றியும், அக்கட்சி பற்றியும், முக்கிய தலைவர்கள் பற்றி பேசியது எல்லாம் சட்டமன்றத்தின் அவை குறிப்பில் உள்ளது. அதை நீக்கவே முடியாது. அதனை மறந்து பேசிக் கொண்டுள்ளார்.

EPS on Ministers Severe criticism

மற்றொரு அமைச்சர் சேகர்பாபு. அவரும் அமவாசை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். மாதம் மாதம் அமாவாசை வருகிறது. ஒவ்வொரு மாதமும் திமுக ஆட்சியின் காலம் குறைந்து கொண்டே வருகிறது. அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். ஆளுங் கட்சியாக இருக்கும் போது திமுகவை எப்படி விமர்சனம் செய்கிறார் என்று அவை குறிப்பில் உள்ளது. அதனை எல்லாம் மறந்து பேசிக் கொண்டுள்ளனர். இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் இல்லை. அரசியல் வியாபாரிகள். உண்மையான அரசியல்வாதியாக இருந்தால் அந்த கட்சியிலேயே இருக்க வேண்டும். 1974 அதிமுகவில் இணைந்தேன். இன்றைக்கு வரை 51 ஆண்டு காலம் அதிமுகவில் இருக்கிறேன். பல நேரங்களில் பதிவியே கூட இல்லாமல் இருந்தேன். சட்டமன்ற வாய்ப்புகள் கூட கிடைக்கவில்லை. ஆனால் கட்சியை நேசித்தேன்.

Advertisment

இன்றைக்கு கட்சியில் உயர்ந்த இடத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் எல்லாம் அப்படி அல்ல. கடைசி காலத்தில் எப்படி இருப்பார்கள் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலை கருதி இந்த வேடந்தாங்கல் பறவைகள் போல அப்போது சீசனுக்கு வந்துவிட்டு செல்வது மாதிரி தான் இவர்கள் எல்லாம். எங்களை பேசுவதற்கு எவ்வித தகுதியும் அருகதையும் கிடையாது” எனப் பேசினார்.