
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். அதிமுகவைச் சேர்ந்த இவர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பான வழக்கைக் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் டி.எஸ்.பி. தலைமையிலான 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக இன்று (25.02.2025) அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனைக்கு பிறகே அவரது வீட்டில் இருந்து ஆவணங்கள், நகைகள் போன்ற ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டனவா? என்ற முழு விவரங்கள் தெரியவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ அதிமுகவின் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜூன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் திமுகவின் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை.

நாடறிந்த ‘ஊழல் திலகங்களான’ இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.
இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அம்மன் அர்ச்சுனனை திறம்பட செய்து வரும் கட்சிப்பணியை தடுக்கும் விதமாக, லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது. திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும்,எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம். 2026இல் வெல்வோம்.நல்லாட்சி அமைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.