
ஈரோட்டில் இன்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி, மாநில உரிமை, சேது சமுத்திர கால்வாய் திட்டம் இதையெல்லாம் மையப்படுத்தி பிரச்சாரத்தைத் தொடங்க இருக்கின்றோம். அதற்கு முன்பாக வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்தில் திருமகன் ஈவெரா படத்திற்கு மாலை அணிவித்தேன்.
ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக் கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக் கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும். மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமானப் பொருளாக மாறி இருக்கிறது. அதைப் பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்" என்றார்.
அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்த கேள்விக்கு, "எதுவாக இருந்தாலும் நட்ட கணக்கில் இருந்தவர்கள் மீள முடியாது. அடமானப் பொருளை எப்போது திரும்பி மீட்கிறார்களோ அப்போதுதான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியைக் கூட பெற முடியும். இல்லையென்றால் அதையும் இழக்கக் கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அதிமுக இருக்கிறது" என்றார்.