Skip to main content

எளிய மனிதர்களுக்கும் அதிகாரம்..!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

DMK Sivashankar's political  History


திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், ‘எளிய மனிதனுக்கும் அதிகாரம்’ என்ற அடிப்படையில் பல புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர்களில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சிவசங்கர். இவருக்குப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

சிவசங்கர், மிகவும் எளிய மனிதர். கட்சிகளைக் கடந்து மாற்றுக் கட்சியினர் பொதுமக்கள் என எல்லோரிடமும் சகஜமாக நெருங்கி பேசி பழக கூடியவர். இவரது தந்தை மறைந்த சிவசுப்பிரமணியம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் திமுகவில் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில் 1989ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வழக்கறிஞரான இவர் தற்போது நீலகிரி எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பெரம்பலூர் ஆ. ராசாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர். 

 

இந்த சிவசுப்பிரமணியன், கலைஞர், பேராசிரியர், முரசொலி மாறன் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அதனடிப்படையில் இவருக்கு ஒருமுறை ராஜ்யசபா எம்.பி. பதவியையும் கட்சித் தலைமை அளித்தது. அப்பாவின் வழியில் சிவசங்கரும் தீவிரமாக கட்சிப் பணிகளில் செயல்பட்டவர். ஸ்டாலினின் அன்புக்குப் பாத்திரமானவர். இவரது தாயார் ராஜேஸ்வரி, இவரது மனைவி டாக்டர் காயத்ரி தேவி. சிவ சரண், சூர்யா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், குடும்பத்தினரோடு இருந்ததைவிட கட்சியினருடனும் பொதுமக்களுடனும் அதிக நேரத்தை செலவு செய்தவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

தற்போதைய அமைச்சர் சிவசங்கர், இலக்கியவாதியும் கூட; இவர், ‘மக்களோடு நான்’, ‘சோழன் ராஜா பிராப்தி’, ‘தோழர் சோழன்’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிலம்பு விளையாட்டு சம்மேளனத்தின் தமிழக அளவில் தலைவர், தடகள சங்கத்தின் தலைவர் இப்படி பன்முகத்தன்மை கொண்ட அரசியல்வாதி. 

 

இவர் 1996 - 2001 வரை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர், 2001 - 2006 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 2006 - 2011 ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011 - 2016 குன்னம் சட்டமன்ற உறுப்பினர் என தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இருந்துவந்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் இவரை திமுக அரியலூர் தொகுதியில் நிறுத்தியது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். மீண்டும் 2021 தேர்தலில் அரியலூர் தொகுதியில் கட்சித் தலைமை போட்டியிட வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையோடு அரியலூர் தொகுதியில் பல்வேறு ஆக்க பணிகளை முனைப்புடன் செய்து வந்தார்.

 

ஆனால், குன்னம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு உட்கட்சி அரசியலை முறியடித்து எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று இப்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். 2011 - 2016 அதிமுக ஆட்சியில், திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், சட்டமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை எதிரொலிக்க செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சட்டமன்றத்தில் திமுகவினரை பேசவிடாமல் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வெளியேற்றும்போது கடும் போராட்டம் நடத்தியவர்களில் சிவசங்கரும் ஒருவர். 

 

DMK Sivashankar's political  History

 

அதேபோன்று தொகுதியிலும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துவார் தொகுதியில் மட்டுமல்ல கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கட்சி பிரமுகர்களின் அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ள இரவு, பகல் என்று பாராமல் சுற்றிக்கொண்டே இருப்பார் என்று அத்தொகுதி திமுகவினர் தெரிவிக்கின்றனர். மேலும், அதேபோன்று அதிமுக ஆட்சியில் மக்களுக்கு விரோதமான திட்டங்களை, பிரச்சினைகளை எதிர்த்து மாட்டுவண்டியில் ஊர்வலமாகச் சென்று போராட்டம் உட்பட பல்வேறு வித்தியாசமான போராட்டங்களை நடத்தியவர். 

 

தற்போது இவருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளது திமுக தலைமை. இதனைக் கண்டு அரியலூர் மாவட்ட மக்கள் கட்சி கடந்து சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது திருச்சி, தஞ்சை பகுதியில்தான் திமுக, அதிமுக கட்சிகளில் அமைச்சர் பதவிகள் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டம், தேவனூர் கிராமத்தில் பிறந்த சிவசங்கர் அவர்களை அமைச்சர் ஆக்கியுள்ளது வரலாற்றுப் பதிவு என்கிறார்கள் திமுக தொண்டர்கள்.

 

அதேவேளையில், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலம் மாவட்ட மக்களுக்குப் போதிய அளவு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இந்த சிமெண்ட் ஆலைகளால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. கிராமச் சாலைகள் பல இடங்களில் மோசமாக சீர்கெட்டு கிடக்கின்றன இவையெல்லாம் சீர் செய்வார் என்ற பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர் மாவட்ட மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.