Skip to main content

என்னை கேட்காம எப்படி உதவி செய்யலாம்... எப்ப தேர்தல் வந்தாலும் எனக்கு சீட் வேணும்... தி.மு.க.-வில் நடக்கும் உட்கட்சி அரசியல்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

dmk

 

சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என்பது இப்போது வரை சந்தேகமாக இருந்தாலும், அரசியல் வாதிகளின் காய் நகர்த்தல்கள் ஓயவில்லை.

 

வேலூர் மாவட்ட தி.மு.க.வை சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு, மத்திய, மேற்கு என பிரித்த போது, மேற்கு மா.செவாக தேவராஜ் நியமனம் செய்யப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு தலைமையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜோலார்பேட்டை முத்தமிழ்ச்செல்வி நியமனம் செய்யப்பட்டார். அவரை மாற்றிவிட்டு தங்களில் யாராவது ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி, திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, முன்னால் எம்.எல்.ஏ சூர்யகுமார் என பலரும் முட்டிமோதினர். துரைமுருகனின் சிபாரிசு மீண்டும் தேவராஜ் பக்கமே இருந்தது. தேவராஜை மீண்டும் நியமிக்கக்கூடாது என பல நிர்வாகிகளும் தலைமைக்கு மனு அனுப்பினர். அந்த மனுக்களை ஒதுக்கிவிட்டு சில மாதங்களுக்கு முன்பு தேவராஜ் மீண்டும் மாவட்ட பொறுப்பாளராக்கப்பட்டார். அதன்பிறகு என்ன நிலை என்று கேட்டால், கட்சிக்குள் உள்ளடி கரோனா புகுந்துவிட்டது என்கின்றனர் உடன்பிறப்புகள்.


கட்சி ரீதியாக வேலூர் மேற்கு மாவட்டம் எனச் சொல்லப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கான சீட்டை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பி, தி.மு.க. ந.செ ராஜேந்திரன், மாணவரணி மோகன் போன்றவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டையை வாங்கிட கடந்த தேர்தலில் அமைச்சர் வீரமணியை எதிர்த்து உட்கட்சி சதியால் தோல்வியைச் சந்தித்த கவிதா முயற்சி செய்யகிறார். வாணியம்பாடி தொகுதியை வாங்கிவிட மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முயற்சி செய்கிறார். ஆம்பூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ வில்வநாதன் உள்ளார்.

 

மற்ற தொகுதிகளைவிட ஆம்பூர் தொகுதியைக் குறிவைத்துத்தான் போட்டி பலமாக உள்ளது. அந்தத் தொகுதியை முதலில் அணைக்கட்டு எம்.எல்.ஏவாக உள்ள மத்திய மா.செ நந்தகுமார் பணிகளைத் தொடங்கினார். மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் ஆம்பூர் சென்றதும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ஆம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போதே பேரணாம்பட்டு ஒ.செ. வில்வநாதன், மாதனூர் ஒ.செ சுரேஷ்குமார், திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பியின் அண்ணன் மாவட்ட பொருளாளராகவுள்ள அண்ணா.அருணகிரி போன்றவர்கள் மோதினார்கள். ஆனால் வில்வநாதன் ஜெயிச்சிட்டார். 2021 தேர்தலில் இந்த ஆம்பூரை வாங்கிவிட அண்ணா.அருணகிரி, சுரேஷ்குமார், தொழிலதிபர் சரவணன் உட்பட சிலர் முயற்சி செய்கிறார்கள். அதற்காக தொகுதியில் கரோனா கால நலத்திட்ட உதவிகளை வழங்குறாங்க. இதில் தொகுதி எம்.எல்.ஏவான வில்வநாதனை அழைக்காமலே அவர் ஒ.செ.வாக உள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்துக்குள் அண்ணா.அருணகிரி போய், கரோனா நலத்திட்ட உதவிகள் தந்தார். அதேபோல் ஆம்பூர் தொகுதிக்குள் வரும் மாதனூர் ஒன்றியத்தில் எம்.எல்.ஏ.-வைப் புறக்கணிப்பது போல் செயல்படுகிறார் சுரேஷ்குமார். இதுதான் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் வெடிச்சது.

 

dmk

 

கடந்த மே மாத இறுதியில் மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், "என்னை கேட்காமல் என் ஒன்றியத்தில் எப்படி மாவட்ட பொருளாளர் வந்து உதவி செய்யலாம்'' எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல் மாதனூர் ஒ.செ. சுரேஷ்குமார், "என் ஒன்றியத்தில் நான் உதவிகள் செய்துகிட்டு இருக்கும்போது சம்மந்தமேயில்லாமல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு நிர்வாகிகள் வந்து, என்னிடம் தகவல் சொல்லாம, என் ஒன்றியத்தில் உள்ள அணி அமைப்பாளர்களை வைத்து எப்படி உதவி செய்யலாம்'' என மாவட்ட பொறுப்பாளரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். இதனால் மாவட்ட கமிட்டி கூட்டம் காரசாரமானது, இதுப்பற்றி தலைமைக்கும் புகார் போய்வுள்ளது என்றார்கள்.

 

ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் நாம் கேட்டபோது, "என் ஒன்றியத்திற்குச் சம்மந்தமேயில்லாத கட்சி நிர்வாகிகள் வந்து என்னிடம் கூட சொல்லாமல் உதவி செய்ததைத்தான் கேள்வி எழுப்பினேன், கட்சிக்கென ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதனால் கேள்வியாக எழுப்பினேன்'' என்றார். மாவட்ட பொருளாளர் அண்ணா.அருணகிரியிடம் நாம் கேட்டபோது, "மாவட்ட கமிட்டி கூட்டம் என்பது எங்கள் கட்சி சம்மந்தப்பட்ட விவகாரம் அதுப்பற்றி நான் வெளியே பேச விரும்பவில்லை'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு, உள்ளடி வேலை பார்த்ததால் தான் கடந்த முறை தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் ஏறுவதில் கோட்டைவிட்டது என்கிறார்கள் கட்சியின் விசுவாசிகள். இப்போதே கோஷ்டி சண்டையைத் துவங்கிவிட்டார்கள், தலைமை தலையிடவில்லையென்றால் கடந்த தேர்தலைப் போல் வரும் தேர்தல் எப்போது நடந்தாலும், கட்சியின் வெற்றியை உள்ளடிகள் காலை வாரிவிடும் என்பதே கள நிலவரம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.