Skip to main content

“அப்போதைய அ.தி.மு.க. அமைச்சரை அடித்து நொறுக்கியிருப்பேன்!” - தே.மு.தி.க. கூட்டத்தில் நடிகர் ராஜேந்திரநாத் காட்டம்!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

DMDK rajendranath comment about ADMK Minister natham visvanath

 

கடந்த 6-12-2020 அன்று ராஜபாளையத்தில் நடந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ‘சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும். விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்குவோம்.’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

 

கடந்த 10-ஆம் தேதி, ஆண்டிபட்டியில் நடந்த தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். “234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது.” என்று பேசினார். 

 

டிசம்பர் 14-ஆம் தேதி, சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கடந்த தேர்தல்களில் நடந்த தவறை இந்த முறை செய்ய மாட்டோம். இது நமக்கு நெருக்கடியான தேர்தல். எனவே, தேர்தல் கூட்டணி அமைப்பதில் கவனத்துடன் இருக்கிறோம். அதிக எண்ணிக்கையில் சீட் வழங்கும் கட்சியுடனே, இம்முறை கூட்டணி அமைப்போம்.” என்று அ.தி.மு.க. தலைமைக்கு ‘செக்’ வைக்கும் விதமாகப் பேசினார்.

 

DMDK rajendranath comment about ADMK Minister natham visvanath

 

 

விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தெற்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் வடக்கு, வத்ராப் மேற்கு, வத்ராப் கிழக்கு ஒன்றியங்களின் சார்பாக, 20-ஆம் தேதி,  ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரநாத்தும், தன் பங்குக்கு, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரை ‘டேமேஜ்’ செய்யும் விதமாகப் பேசியிருக்கிறார். 

 

“2011 சட்டமன்ற தேர்தலில், கேப்டன் எனக்கு சீட் தந்து, நான் எம்.எல்.ஏ. ஆகியிருந்தால், என் தலைவரை (விஜயகாந்த்) கை நீட்டிப் பேசிய, அப்போதைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அடித்து நொறுக்கியிருப்பேன்.” எனப் பேச, விசிலும், கைதட்டலுமாக, அக்கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.  

 

தேமுதிக, உள்ளுக்குள் என்ன திட்டம் வைத்திருக்கிறதோ? கட்சி நிர்வாகிகள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்களோ?

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.