Skip to main content

''என்ன சம்பந்தம் பேசவா வராங்க; ரெய்டுனா என்னன்னு காவல்துறைக்கு தெரியாதா?'' - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

Published on 28/05/2023 | Edited on 29/05/2023

 

NN

 

தென்காசி ஆலங்குளம் பகுதியில் நடைபெறும் கனிம வளக் கொள்ளையை எதிர்த்து தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழகத்தில் நிச்சயமாக கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டிய விஷயம். தினம்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்குக் கனிமவளம் கடத்தப்படுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கேரளாவில் இருந்து ஒரு லாரியாவது கனிம வளத்தை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் வருமா? கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள், கோழி கழிவுகள், மருத்துவக் கழிவுகளையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து தமிழகத்தை குப்பைக்காடாக மாற்றக்கூடிய பொருட்கள் மட்டும் கேரளாவில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பைக்கூலமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது'' என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடக்கிறது. காவல்துறையினர் கொஞ்சம் கூட வாய் கூசாமல் சொல்கிறார்கள்' எங்களுக்கு சொல்லவே இல்லை; தகவல் கொடுக்கவில்லை; தகவல் கொடுத்திருந்தால் நாங்கள் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்திருப்போம்' என்று சொல்கிறார்கள். ரெய்டு என்றால்  சாதாரண மனிதனுக்கு கூட தெரியும். யாருக்கும் சொல்லாமல் திடீரென வருவதற்கு பெயர்தான் ரெய்டு. இவர்கள் என்ன சம்பந்தம் பேச வருகிறார்களா அல்லது டின்னருக்கு வராங்களா தகவல் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வருவதற்கு. அப்படி வந்தால் அதற்கு பெயர் ரெய்டா. இது கூட காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? அப்பொழுது எந்த அளவிற்கு தமிழக அரசிற்கு காவல்துறை கைப்பாவையாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது