Skip to main content

உதயநிதி பேச்சு! - அப்செட்டில் பொன்னம்மா பேத்தி!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

dindigul district udhayanidhi stalin election campaign

 

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

வத்தலகுண்டில் காளியம்மன் கோவில் அருகே தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன் தலைமையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பின்னர் நிலக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற உதயநிதிக்கு நான்கு முனை சந்திப்பில் ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், சௌந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

 

அங்கு மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மற்றும் மறைந்த பேரூர் செயலாளர் கருணாநிதி ஆகியோர் படங்களுக்கு மலர்த்தூவி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, பொன்னம்மாள் படத்தின் அருகே அவரது பேத்தியும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளருமான ஜான்சிராணி காத்திருந்தார்.

 

dindigul district udhayanidhi stalin election campaign

 

அதைத் தொடர்ந்து, அங்கு வந்த உதயநிதி ஸ்டாலின், "பேசிவிட்டு வந்து மலர் தூவுகிறேன் எனக் கூறியவாறே பேசத் தொடங்கியவர், தமிழக அமைச்சர்கள் மந்திரிகளாக இல்லாமல் மங்குனிகளாக இருக்கிறார்கள் என்றார். அப்போது பொதுமக்களிடம் 'தெர்மகோல் யார்?' என்று உதயநிதி கேட்க அங்கு கூடியிருந்தவர்கள் செல்லூர் ராஜு என்றனர். அதேபோல், 'மெயின் ரோட்டுக்கு வாம்மா' எனக் கூற ஜெயக்குமார் என்றனர். 'பஃப்பூன்' எனக் கூற ராஜேந்திரபாலாஜி என்றனர், இவ்வாறு தமிழக அமைச்சர்களை பொதுமக்களின் வாயிலாகக் கலாய்த்த உதயநிதி, இறுதியில் தமிழகத்தில் பொருள்களின் விலைகளும் பன்மடங்காக உயர்ந்துவிட்டது. பெட்ரோல் ரூபாய் 100- ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன. இந்தத் தொகுதியில் தி.மு.க. ஜெயித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில், சரியான வேட்பாளரை தி.மு.க. தலைவர் நிறுத்தவுள்ளார். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துப் பேசி முடித்தார். 

 

dindigul district udhayanidhi stalin election campaign

 

தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டுவாங்கித் தேர்தலில் நின்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பொன்னம்மாள் பேத்தி ஜான்சிராணி உதயநிதி பேச்சால் ஒட்டு மொத்தமாக அப்செட்டாகி நின்றார். வேனிலிருந்து கீழே இறங்கிய உதயநிதி, ஜான்சிராணியை அவ்வளவாகக் கண்டுகொள்ளாமல் இருவர் படத்திற்கும் மலர்த்தூவி வணங்கிவிட்டு பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்தார். உதயநிதியின் பேச்சால் உற்சாகமான தி.மு.க.வினர் சீட்டு ரேஸில் களமிறங்கத் தொடங்கிவிட்டனர்.

 

இந்த தேர்தல், பிரச்சார சுற்றுப்பயணத்தின் போது உதயநிதியுடன் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.