Skip to main content

தேர்தலில் விலகல்; ஆதரவு யாருக்கு? - டிடிவி தினகரன் விளக்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Defection in Erode East by-elections; Who is the support of AMMK? Explanation by TTV Dhinakaran

 

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பொதுக்குழு வழக்கு காரணமாக அதிமுகவில் வேட்பாளரை இறுதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வழியாக அதிமுகவின் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அமமுக அறிவித்தது. பொதுத்தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்படும் என்பதன் காரணமாக தேர்தலில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பின்வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம்' எனவும் டி.டி.வி.தினகரன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தனியாகத்தான் போட்டியிட்டோம். கூட்டணிக்கான வாய்ப்பு என்பது பாராளுமன்ற தேர்தல் வரும் பொழுது பார்க்கலாம். ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்பதை நான் என்றும் சொன்னதில்லை. கூட்டணியில் இணைய வேண்டும் என்று தான் சொன்னேன். 

 

திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் ஓரணியில் திரண்டு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தான் சொன்னேன். இன்னும் என் நிலைப்பாடு அதுதான். இரட்டை இலை இபிஎஸ் தரப்பிற்கு கொடுத்துவிட்டதால் மட்டும் ஜெயித்துவிடுவார்களா என்ன. மக்களுக்கே தெரியுமே. இரட்டை இலை தவறானவர்கள் கைகளில் தீயவர்கள் கை களில்உள்ளது. சின்னத்தை வைத்துக் கொண்டு தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள். மீண்டும் நீதிமன்றம் பழனிசாமி கம்பெனிக்கு இரட்டை இலையை கொடுத்தாலும் இரட்டை இலைக்கான சக்தி இருக்காது. அது தவறானவர்கள் கைகளில் உள்ளது. 

 

அமமுக ஒன்றும் பெரிய கட்சி கிடையாது. இந்த தடவையும் திமுகவை வீழ்த்த வேண்டும் என போட்டியிடுவதற்கு தயாரானோம். ஜெயிப்போம் என்பதை விட வாக்குச் சதவீதத்தை பெறுவோம் என்ற நம்பிக்கையில் தான் இறங்கினோம். தேர்தல் ஆணையம் சின்னம் கொடுக்க மறுத்ததால் தேர்தலில் போட்டியிடவில்லை. நாங்கள் திமுகவையும் ஆதரிக்க முடியாது. அதிமுகவையும் ஆதரிக்க முடியாது. இதுதான் அமமுக நிலைப்பாடு” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.