Skip to main content

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு! 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
CV Shanmugam sudden meeting with pmk founder Ramadoss

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸுகு அதிகாரம் வழங்கியும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் கூட குறைந்தது 7 இடங்களில் பாமக வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி தனித்து போட்டியிட இப்பொழுது பாமக தயாராக இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. திடீரென சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று (05.02.2024) இரவு 7 மணியளவில் ராமதாஸ் வீட்டுக்கு சென்ற சி.வி. சண்முகம் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பானது சுமார் 35 நிமிடங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணியில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்