Skip to main content

“நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும்” - சி.வி. சண்முகம் ஆரூடம்

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

cv sanmugam talk about parliamentary elections and assembly elections come to same

 

அ.தி.மு.க -வின் 51-வது பொன்விழா ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக விருத்தாச்சலம் வானொலி திடலில் பொன்விழா  பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் தலைமையில் நடைபெற்றது.

 

சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசுகையில், " எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. 50 ஆண்டுகால கட்சி வரலாற்றில் 32 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த மாபெரும் இயக்கமாகத் திகழ்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்தி விடலாம் என கனவு காண்கிறார். முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த, அ.தி.மு.க தொண்டர்களின் கோவிலாக இருக்கக்கூடிய தலைமைக் கழகத்தை தி.மு.கவுடன் இணைந்து காவல்துறை துணையுடன் உள்ளே புகுந்து சூறையாடிச் சென்ற ஓ.பி.எஸ் ஒரு கருங்காலி, துரோகி. இங்கு இருந்து எல்லாப் பதவிகளையும் சுகங்களையும் அனுபவித்த  கருங்காலி ஓ.பி.எஸ்ஸை வைத்துக் கொண்டு அ.தி.மு.கவை அழித்து விடலாம் என நினைக்க வேண்டாம். அது முடியவே முடியாது.

 

தி.மு.க ஆட்சி முடிவதற்கு 5 வருடம் காத்திருக்கத் தேவையில்லை. தி.மு.க ஆட்சி எப்போது போகும் என திமுகவினரே புலம்புகின்றனர். மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்க்கவில்லை. தேர்தலின் போது கொடுத்த 525 வாக்குறுதிகள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 46 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதில் 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சொத்துவரி உயர்ந்துவிட்டது.  கிராமப்புறங்களிலும் வீடுகளுக்கான சொத்துவரி வசூலிக்கப்படவுள்ளது. மேலும் மக்களுக்கு அடுத்த பரிசாக பேருந்து கட்டணம் உயர உள்ளது. தமிழகத்தில்  அனைத்து மாவட்ட மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் கூட அரசு மருத்துவமனையில் இல்லை. 

 

மக்கள் பிரச்சனைகளை மறக்கடிப்பதற்காக தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் பள்ளியில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்பள்ளியில் ஹிந்தி கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்" எனத் தெரிவித்தார்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், சிவசுப்பிரமணியன், நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை, ரகுராமன், பச்சமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.