![Constituency distribution will be finalized after the arrival of the Chief Minister says DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/2AebfBhXlFJKnWMdR5N9Oe1LG90-qilv_I3PVhgexQY/1707026248/sites/default/files/inline-images/Untitled-1_689.jpg)
இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டி.ஆர்.பாலு தலைமையிலான இந்த திமுக தேர்தல் குழு தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ், விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நேற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும். முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்து வந்த பிறகு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.