Skip to main content

6 நாட்களுக்கு தொடர்ச்சியாக மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் யோசனை

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

 

6 நாட்களுக்கு தொடர்ச்சியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதற்கு வசதியாக மொத்தம் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், அமைதியாக தேர்தலை நடத்த இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.

 

tasmac



தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இரு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30-ஆம் தேதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்கள் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு, அதாவது 25-ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 27-ஆம் தேதி மாலை 5.00 மணி வரையிலும், அதேபோல், இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 28-ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 5.00 மணி வரையிலும் மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. இவை தவிர வாக்கு எண்ணும் நாளன்றும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழக அரசின் இந்த ஆணைப்படி முதல் இரு கட்ட தேர்தல்களிலும் வாக்குப்பதிவு முடிவடைகிறதோ இல்லையோ, அன்று மாலை 5.00 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது வணிகம் தொடங்கி விடும். அதுமட்டுமின்றி, எந்தெந்த பகுதிகளில் எல்லாம் வாக்குப்பதிவு நடைபெறுகிறதோ, அந்த இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க  எந்தத் தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்த உதவாது என்பது மட்டுமின்றி, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.


 

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு என்பது வாக்குப்பதிவு நாளின் மாலை 5.00 மணியுடன் நிறைவு பெறும் நிகழ்வு அல்ல. உள்ளாட்சித் தேர்தல்களுக்கும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில்  வாக்காளர்கள் ஒரே ஒரு வாக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும் என்பதால் வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்குள் அனைவரும் வாக்களித்து விடுவர் என்பது மட்டுமின்றி, அடுத்த சிறிது நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப் பட்டு விடும். அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் நடந்த தடமே தெரியாத அளவுக்கு சூழல் மாறிவிடும்.
 

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் அப்படிப்பட்டதல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சீட்டுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஊரக உள்ளாட்சிகளில் ஒவ்வொரு வாக்காளரும் ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் என மொத்தம் 4 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.  ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 750 வாக்குகள் இருக்கும் என்பதாலும், வாக்காளர்கள்  வாக்குச்சீட்டை நன்கு ஆராய்ந்து தான் வாக்களிக்க முடியும் என்பதாலும் வாக்குப்பதிவுக்கு அதிக நேரம் பிடிக்கும். அதனால், மாலை 5.00 மணிக்குள் வாக்குப்பதிவு முடிவடைய வாய்ப்புகளே இல்லை.
 

மாலை 5.00 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு அடையாளச்சீட்டு கொடுத்து, அவர்கள் அனைவரும் வாக்களித்து முடிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் இரு மணி நேரம் வரை ஆகும். அத்தகைய சூழலில் தேர்தல் முடிவடைவதற்கு முன்பாகவே மாலை 5.00 மணிக்கே மதுக்கடை  திறக்கப்பட்டால் அது அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கான சூழலை சீர்குலைத்து விடும். அதுமட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் போட்டியிடுவர் என்பதாலும், போட்டி கடுமையாக இருக்கும் என்பதாலும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய மோதல்கள் அதிகமாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி  இடைத்தேர்தல்களின் போது வாக்குப்பதிவு நாள் முழுவதும் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை திறந்து வைக்கலாம்; தேர்தல் நடைபெறாத சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என்பதும் நல்லதல்ல.  போக்குவரத்து வசதி அதிகரித்து விட்ட சூழலில் 5 கி.மீட்டருக்கும் அப்பால் சென்று மதுவை வாங்கி வருவதோ, தேர்தல் நடைபெறாத அண்டை மாவட்டத்துக்குச் சென்று மதுப்புட்டிகளை வாங்கி வருவதோ கடினமான ஒன்றல்ல. அதேபோல், 25 மற்றும் 28-ஆம் தேதிகளில் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் இருக்கும் என்பதால் மதுவை வாங்கி வைக்கவும் வாய்ப்புள்ளது.  இவை அனைத்துமே தேர்தல்களில் மோதலையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு தான் வழிவகுக்கும்.
 

எனவே, முதல் கட்டத் தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாட்கள் முன்பாக அதாவது 25-ஆம் தேதி    முதல் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 30-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக மதுக்கடைகளை மூட வேண்டும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளில் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து 6 மணி நேரம் கழித்து தான் மதுக்கடைகள் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.