Skip to main content

''முதல்வர்தான் அமைச்சருக்கு பதில் சொல்ல வேண்டும்''-வானதி ஸ்ரீனிவாசன் காட்டம்!    

Published on 21/08/2022 | Edited on 22/08/2022

 

 chiefminister should answer the minister"- Vanathi Srinivasan Kattam!

 

இன்று செய்தியார்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''மத்திய அரசின் திட்டம் என்பது ஏழை எளிய மக்களுக்கான திட்டம். இதனை தமிழக அரசு வித்தியாசப்படுத்தி பார்க்காமல் இந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.  அமைச்சகத்தின் சார்பில் அங்கங்கு முகாம்கள் நடத்தி கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை இதில் இணைக்க முடியும். இது மோடி அரசாங்கத்தின் திட்டம், பிஜேபி கட்சி நடத்துகின்ற ஆட்சியில் வருகின்ற திட்டம் என்று என்றெல்லாம் வித்தியாசப்படுத்தி பார்க்காமல் ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் மூலம் உதவி செய்ய வேண்டும்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனியார் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியின் போது மத்திய அரசு சொல்லும் ஆலோசனைகளை நாங்கள் ஏன் ஃபாலோ பண்ண வேண்டும், நிதி துறையில் மத்திய அரசு நோபல் பரிசு வாங்கி இருக்கிறதா? தமிழகம் எல்லா புள்ளிகளும் முன்னணியில் இருக்கும் பொழுது அவர்களிடம்  ஏன் ஆலோசனை பெற வேண்டும் என்ற கருத்தை வைத்துள்ளார் அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?' என கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதிலளித்த வானது சீனிவாசன்,  ''நானும் அதை பார்த்தேன். அதற்கு பாஜகவினுடைய தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்ததற்கு பிறகு எங்களது மாநில தலைவரை கூட டிவிட்டரில் ஒரு மூன்றாம் தர விமர்சனத்தை பதிவு பண்ணி இருக்கார் அமைச்சர். இது ஒன்றும் முதல் தடவை அல்ல இதற்கு முன்பு பாஜக மாநில தலைவர் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைத்தாலும் மாநிலத்தின் நிதி அமைச்சர் என்ற பொறுப்புக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதும், நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தேன், நான் நான்காம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை என்று அவர் பெருமை பேசுவது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம் என்றால் அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார். நான் நல்லா படிச்சிருக்கேன், ஃபாரின்ல டிகிரி வாங்கி இருக்கேன், நான் ஃபாரின்ல வேலை செய்திருக்கேன் அதனால் நான் சொல்றேன். மத்திய அரசாங்கத்தில் நீங்கள் எல்லாம் நோபல் பரிசு வாங்கினீர்களா? நீங்க படிச்சிட்டு வந்தீங்களா? நீங்க சொல்றதெல்லாம் நான் ஏன் கேட்டுக்கணும் என்றெல்லாம் அவர் சொல்வதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், மாநிலத்தினுடைய முதலமைச்சரையே விமர்சனம் செய்கிறார் என்று பார்க்கிறேன்.

 

ஏனென்றால் அவர் சொல்ல வருகின்ற செய்தி நோபல் பரிசு வாங்குபவர்கள், யுனிவர்சிட்டியில் டிகிரி வாங்கியவர்கள் தான் ஆட்சி நடத்த வேண்டும், மக்களைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டும் என்றால் அப்பொழுது மாநிலத்தின் முதலமைச்சர்தான் அவருக்கு பதில் சொல்ல வேண்டும். திமுகவில்கூட எத்தனையோ பேர்கள் கல்லூரி பக்கம் செல்லாமலேயேகூட மிகச் சிறந்த மக்கள் பணியாளர்களாக, மக்கள் தலைவர்களாக உருவாகி இருக்கிறார்கள். அரசியலில் இருப்பதற்கு அடிப்படையானது மக்களை நேசிக்கின்ற குணம். நான் எந்த இடத்தில் படித்தேன் என்ற சர்டிஃபிகேட் அவசியமில்லை. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.