Skip to main content

எல்லா காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி, சென்னையில் கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
anbumani ramadoss

 

தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை பதிவு செய்வதற்காக சென்னையில் தனி கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், ''சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் சித்திரவதைக் கொலைகள் நாடு முழுவதும் உள்ளவர்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. அவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத்  தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் ஆணைப்படி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் முழுமையாக பதிவாகியிருந்தால், அதைக் கொண்டே தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். தேவையற்ற சர்ச்சைகள் எதுவும் ஏற்பட்டு இருந்திருக்காது. ஆனால், அக்காவல் நிலைய கண்காணிப்பு காமிராவில் பதிவாகும் அனைத்துக் காட்சிகளும் அடுத்த நாளே அழிந்து விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

‘‘காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் பொது ஆவணங்கள். அவை அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். ஏதேனும் சாட்சிக்காக  பொதுமக்கள் தரப்பிலிருந்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் கோரப்பட்டால், அவற்றை காவல் நிலைய நிர்வாகம் வழங்க வேண்டும்’’ என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், அத்தீர்ப்புக்கு மாறாக காவல்நிலைய கண்காணிப்பு காமிரா பதிவுகள் ஒரே நாளில் அழிந்து விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அந்தக் காவல் நிலையத்தில் தொடர்ந்து தவறுகள் நடப்பதாகவும், அதை மறைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது.

அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் குற்றப்புலனாய்வில் கண்காணிப்பு காமிராக்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குற்றங்களைத் தடுப்பதற்காகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்வதற்காகவும் தான் சென்னை போன்ற நகரங்களின் சாலைகளில் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு காமிரா வீதம் அமைக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் எதற்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவோ, அதற்கான காரணங்கள் அனைத்தும் காவல் நிலையங்களுக்கும் பொருந்தும். இனி வரும் காலங்களிலாவது காவல் நிலையங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு காமிராக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

காவல் நிலையங்களில் குற்றங்கள் நடப்பதைத் தடுக்க, கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட  வேண்டும் என்றுகோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, ‘‘காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 1567 காவல் நிலையங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் காவல்நிலையங்களில் வரவேற்பரை, நுழைவாயில், லாக்கப் ஆகிய இடங்களில் தலா ஒரு காமிரா வீதம் மொத்தம் 3 காமிராக்கள்  அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2020-ஆம் ஆண்டுக்குள் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும்’’ என்று தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான காவல் நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், காவல் நிலைய கண்காணிப்பு காமிராக்களின் இயக்கம், பதிவு ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்தால், சாத்தான்குளத்தில் செய்யப்பட்டது போன்று காமிராக்களில் பதிவான காட்சிகள் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதைக் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

காவல் நிலையங்களில் காமிராக்களை நிறுவும் பொறுப்பும், அவற்றை இயக்கும் பொறுப்பும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சைபர்கிரைம் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த காவலர்களைக் கொண்டு அமைக்கப்படும் தனிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகள் சென்னையில் புதிதாக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு காமிராவிலும் பதிவாகும் காட்சிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆவணப்படுத்தப்பட்டு சேமித்து வைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட காட்சிகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். இது கடினமானதோ, சாத்தியமற்றதோ இல்லை. சென்னை மாநகர சாலைகளில் மட்டும் சுமார் 4 லட்சம் காமிராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் பதிவாகும் காட்சிகள் சேகரிக்கப்படும்போது, தமிழகக் காவல்நிலையங்களில் அதிகபட்சமாக உள்ள  5 ஆயிரம் காமிராக்களின் பதிவுகளை சேகரித்து வைப்பது கடினமானது அல்ல; மிக எளிமையானது.

எனவே, தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை பதிவு செய்வதற்காக சென்னையில் தனி கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டு காவல்நிலையங்கள் குற்றம் நடக்காத பகுதிகளாக, மனித  உரிமைகள் மதிக்கப்படும் இடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.