Skip to main content

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு பரிந்துரை; பா.ஜ.க. கடும் எதிர்ப்பு!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 BJP Strong opposition on Retired Justice Chanduru Committee Recommendation

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒய்வுபெற்ற கே.சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்று (18-06-24) சமர்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

இந்த நிலையில், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பா.ஜ.க நிர்வாகி ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.கவினர் இன்று (19-06-24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஹெச்.ராஜா, “மாணவர்களின் கையில் கயிறு கட்டக்கூடாது என எப்படி சொல்லலாம்?. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஹிந்து மக்களை குறிவைத்து இது போன்று பரிந்துரை செய்துள்ளார். இதை ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு அவர் கொடுத்திருக்கிறார். இந்தப் பரிந்துரைகள் கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மேலும், இந்தப் பரிந்துரைகளை மாநில அரசு கண்டிப்பாக ஏற்கக் கூடாது” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்