Skip to main content

சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.கவினர் வெளிநடப்பு (படங்கள்)

Published on 21/06/2024 | Edited on 21/06/2024

 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் இன்று(20.06.2024) தொடங்கியது. அப்போது, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் அ.தி.மு.க, பா.ம.க மற்றும் பா.ஜ.க ஆகிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொடர்ந்து போராட்டம் நடத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதனையடுத்து, பா.ம.க எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும்” - தொல்.திருமாவளவன் எம்.பி.,

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
 thol thirumavalavan speech about VIT Viswanathan

கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்கா, நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்ட்டது. இதற்காக தமிழியக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் தொல்.திருமாவளவன் பேசுகையில் “அண்ணன் விஐடி நிறுவனர், வேந்தர், தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பொறுப்புணர்வோடு பணியாற்றி வருகிறார் என்பதை நாமும், நாடும் அறியும். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்ட அறிஞர். பெரியார், அண்ணா போன்றோரால் ஈர்க்கப்பட்ட, சமூக நீதி அரசியலையும், தமிழ் இயக்கத்தையும் உறுதியாக பாதுகாத்து வருபவர். இன்று அவர் ஒரு கல்வி தந்தையாக அறியப்பட்டாலும், அரசியலில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார் என்பதை எனது பார்வையில் மேலோங்கி நிற்பதாக நினைக்கிறேன். 

வெறும் வேடிக்கை பார்க்காமல், மொழி உணர்வு, இன உணர்வு பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கு பணியாற்றக் கூடியவர். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். அதனால்தான் தமிழ் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி, தமிழ் தேசிய களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அனைவரையும் ஒன்றினைப்பதற்கான பணியைச் செய்து வருகிறார். கட்சி அடிப்படையில் பலர் சிதறி கடந்தாலும், அனைவரையும் ஒரு மேடையில் இணைப்பதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

தமிழ்நாட்டில் பெரியார் அரசியலுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், இங்கு காலூன்ற பார்க்கிறார்கள், அவர்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது, என்று சொன்னார். அதிமுக, திமுக போன்ற கட்சிகளைப் பலவீனப்படுத்துவது, ஆபத்தில் முடிந்துவிடும், பெரியாரின் கருத்துக்கும் பேராபத்தாக முடிந்துவிடும், என்று சொன்னவர். அதற்கான பல விசயங்களை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். அவரது அனுபவங்களைச் சொன்னார். மக்கள் நலக்கூட்டணி உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கானதாக இருக்கலாம், ஆனால் மறுபரிசீலனை செய்யுங்கள், வாக்கு சிதறி விடக்கூடாது, என்றார். இதை அவர் சொல்லியிருக்க தேவையில்லை. அவர் திமுக மற்றும் அதிமுக-வுக்காக பணியாற்றவில்லை. அவரது கவலை என்னவென்றால், தமிழகத்தில் தமிழ் அரசியலுக்கு எதிரான சக்திகள் இங்கு காலூன்றி விடுவார்களோ என்ற கவலை. சனாதான சக்திகள் இங்கு வந்துவிடுவார்களோ, என்ற கவலை அவருக்கு. அவர் சொன்னது பற்றிப் பலமுறை பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு காவிரி நீர் பிரச்சனைக்கு இன்றைய தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி  தலைவர் அண்ணன் ஸ்டாலின் அழைத்த போது, எந்தவித ஆச்சரியமும் இன்றி அவருடன் கைகோர்த்தோம், இன்று தொடர்ந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு பல வெற்றிகளைக் கொடுத்து வருகிறார்கள். 

அவரது அரசியல் என்பது, மாநில உரிமைகள் பறிபோகக் கூடாது, மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது, என்ற புரிதல், அந்தத் தெளிவு, அந்தப் பொறுப்புணர்வு அண்ணன் இடத்தில் மேலோங்கி இருப்பதை நான் பார்க்கிறேன். கல்வியை வணிகமாக பார்க்காமல், அதன் மூலம் மக்களை முன்னேற்ற முடியும், சாதி கொடுமைகளில் இருந்து மக்களை மீட்க முடியும், என்ற புரிதல். உயர் கல்வியில் சாதனைப் படைத்திருக்கிறார் என்பதால்தான் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியில் 27 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்தில் இருக்கிரது. இதை ஒரு அரசு மட்டும் செய்ய முடியாது, விஐடி யும் சேர்ந்து செய்திருக்கிறது, என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்று விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தில் இருந்து படிக்கிறார்கள், அதற்குக் காரணம், தரமான கல்வி வழங்குவதுதான். அதனால்தான் இப்படி ஒரு சிறப்பான பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

இதைத் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் எங்கே இருக்கும் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு அண்ணனின் அருமை தெரிந்திருக்கிறது. அவருக்கு இந்தக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்கள், கல்வி தளத்தில் ஆற்றி வருகின்ற பணிகள் பாராட்டுக்குரியவை, போற்றக்கூடியவை என்றாலும், தமிழுக்காகவும், தமிழ் தேசியத்திற்கும் அவர் ஆற்றிக்கொண்டிருக்கின்ற பணிகள் மேலும் சிறப்பானவை. எங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் அண்ணன் வழியில் பணியாற்றி வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசியத்திற்காக பணியாற்றி வரும் கட்சி என்பதால்தான் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட போது என்னை அழைத்து பாராட்டினார். அதற்காக இந்த நேரத்தில் அண்ணன் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முன்னெடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்று சொல்லி, விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார்.

Next Story

பாஜக மத்தியில் 5 ஆண்டுகள் நிலைக்குமா என்பது கேள்விகுறிதான்? - 'இந்து' என்.ராம்! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Hindu N. Ram said question mark is whether BJP will stay in central for 5 years

இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர், பல நாடுகளுக்கு பயணித்து பத்திரிகையாளராக பணிபுரிந்தவர். மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அவர்களை நக்கீரன் சிறப்பு பேட்டிக்காக சந்தித்தோம். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்தும் சம கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் நம்முடைய கேள்விகளுக்கு தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மூத்த பத்திரிக்கையாளரான நீங்களும், ஓய்வு பெற்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதியும் பிரதமர் மோடியிடமும், ராகுல்காந்தியிடமும் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைத்தீர்கள்? அதுக்கு என்ன பதில் வந்தது? எப்படி இதை செய்தீர்கள்? 

அரசியல் ஞானமுள்ள நண்பர் ஒருவர் தான் இப்படி செய்யச் சொல்லி பரிந்துரைத்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் மிகவும் தைரியமானவர், நன்றாக எழுதவும் பேசவும் கூடியவர். அவரையும் வைத்துத் தான் இந்த விவாதத்திற்கான கடிதத்தை மிகவும் கவனத்துடன் எழுதி அனுப்பினோம். மீடியா யாருக்கும் தெரிவிக்காமல் முதலில் பிரதமர் தரப்பிற்கே அனுப்பினோம். அவர்களது தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் இது குறித்து கேள்வி கேட்ட போது ராகுல்காந்தி மீடியாவிற்கும் பதிலளித்தார். எங்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார்.  பிரதமர் தரப்பிலிருந்து பதில் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படியான ஒரு விவாதத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கிராமப்புற வேலைவாய்ப்புகள், ஜி20 நாடுகளில் கீழ் இடத்தில் இருக்கிறது இது குறித்தெல்லாம் பேசியே ஆக வேண்டும் என்று நினைத்தோம்.  ராகுல்காந்தி இது குறித்து ஒரு பேசினார், பொருளாதாரத் துறையிலும், சமுதாயத் துறையிலும் நாடு சமநிலையற்ற தன்மையில் இருக்கிறது என்றார். ஆனால் இதை அப்படியே பாஜக தரப்பிலிருந்து கொச்சைப்படுத்தி, உங்களது தாலியை எல்லாம் பிடுங்கிக் கொள்வார்கள் என்று தவறாக பேசினார்கள். அசிங்கமாக நடந்து கொண்டார்கள் தான். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை. 

பல பிரதமரை பார்த்த உங்களுக்கு மோடி உடன் ஒப்பிடுகிற அளவிற்கு வேறு யாரேனும் தலைவர்கள் இருக்கிறார்களா? 

இவர் ஒரு புது மாதிரியான ஆளாக இருக்கிறார். 18 வருடங்களாகவே தனிப்பட்ட முறையிலேயே தெரியும். போன் பண்ணுவார், தமிழகம் வந்தால் பார்ப்பார். நிறையா விசயங்கள் குறித்து பேசுவோம். மாநில உரிமைகள் குறித்து கூட முதல்வராக இருந்த போது குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் பிரதமர் ஆனதுமே முழுமையாக மாறி விட்டார். தலைமை பொறுப்பிற்கு வந்ததுமே அமித்ஷாவை வைத்து பழைய பாஜக தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, போன்றோர்களை ஓரங்கட்டினார். 

நீங்க குறிப்பிட்ட தலைவர்களுடன் பாஜகவில் சுஷ்மா சுவராஜ், பிரமோத் மகாஜன் போன்றவர்களெல்லாம் முன்னால் இருந்தார்கள். இப்போது அப்படியான அடுத்தகட்ட தலைவர்கள் இருக்கிறார்களா? 

நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத் எல்லாரும் இருக்காங்க, ஆனால் அவங்க எல்லாருக்கும் மோடி மீது முரண்பாடு இருக்கிறது. அமித்ஷா கூட இருக்காரு, ஆனால் இந்த முறை அவரையுமே பெரிதாக கண்டுகொள்ளாதது போல் தான் மோடி நடந்து கொள்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. வேற தலைவர்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஆனால் மோடி அளவிற்கு அவங்க ஆதிக்கம் செலுத்த முடியாது. 

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு யோகி-மோடி முரண் எதாவது காரணமாக இருக்குமா?

மாநில ஆட்சியில் யோகி ஆதித்யநாத் மீது எந்த விமர்சனமும் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால் அமித்ஷாவிற்கு பிடிக்காததால் யோகி கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார். இவர்களை விட மோசமான இந்துத்துவவாதி அவர், ஆனால் தலைமையில் ஒத்துழைப்பு இல்லாததால் எலெக்சன் ரிசல்ட் அப்டி வந்திருக்கிறது. முன்னெல்லாம் பாஜகாவில் நிறையா பேர் அடுத்தடுத்த இடத்தில் இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த கட்சியைப் பொறுத்தவரை மோடியின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் கூட்டணி ஆதரவோடு ஆட்சி அமைக்கிறவர்கள் ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்வார்களா? அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் நடைபெறுமா?

பாஜக முந்தைய ஆட்சியைப் போல மாநிலங்களை நசுக்குதல் வேலையை செய்ய முடியாது. ஆளுநரைக் கொண்டு அங்கு சிக்கலை உண்டாக்க முடியாது, குறிப்பாக தமிழக ஆளுநர் மாநில திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தடுப்பதும் பிறகு உச்சநீதிமன்றத்தில் திட்டு வாங்குவதுமாக இருக்கிறார். இனிமேல் அப்படியெல்லாம் செய்ய முடியாது தான். சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் தங்களுடைய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார்கள். ஐந்து ஆண்டுகள் நிலைக்குமா என்பது கேள்விக்குறி தான். நிலைக்குமா? நிலைக்காதா? என்று ஜோசியம் சொல்ல முடியாது.  சொந்த கட்சியில் கூட யாரையும் தலைதூக்க கூட விடாத அளவுக்கு பார்த்துக் கொள்கிற மோடி, இவ்விருவரின் விசயத்தில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்வார்தான் என்று நினைக்கிறேன். 

காங்கிரஸ் கட்சியினர் இந்த தேர்தல் மூலமாக ஆட்சி அமைக்காவிட்டாலும் அதை ஒரு ஒரு வெற்றியாக நினைத்துக் கொள்ளலாமா?

வெற்றி தோல்வி என்பது அரசியல் அதிகாரத்தை வைத்து மட்டுமே முடிவெடுக்க கூடாது. அவர்களுடைய குறிக்கோள் நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் படிப்படியாக பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். அதை ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் எனலாம். பாஜகவினர் காங்கிரஸை வெற்றி பெறவில்லை கொச்சைப்படுத்துகிறார்கள். அதெல்லாம் அரசியலில் நடப்பது தான். ஆனால் காங்கிரஸில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது கூட காங்கிரஸிற்கு பின்னடைவை உருவாக்கி இருக்குமோ?

சமீபத்தில் சரத்பவார் உடன் பயணித்துக் கொண்டிருந்த போது சொன்னார். முந்தைய காலகட்டங்களில் எல்லாம் கூட பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் வேலை செய்திருக்கிறோம். வாஜ்பாயி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய தேர்தலில் கூட எதிரே யார் என்று கேள்விக்குறியை வைத்து செய்த பிரச்சாரம் வென்றது. பத்து வருடங்கள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த முறையும் அப்படித்தான் முயன்றோம். ஆனால் இந்த முறை சோனியாகாந்தியை அறிவித்து இருந்திருக்கலாம் என்றார். 

சரத்பவார், மம்தா பேனர்ஜி எல்லாம் காங்கிரஸிலிருந்து வெளியே வந்தவர்கள் என்பதால் ராகுல்காந்தியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களா?

அப்படி இல்லை, சரத்பவார் ஏற்றுக் கொள்வார். கார்கேவை கட்சி தலைவராக ஏற்றுக்கொண்டாலும் அவரே ராகுல்காந்தி தான் பிரதமராக வேண்டும் என்று சொன்னவர். ஆனால், ராகுல்காந்தியோ தன்னைத்தான் எல்லோரும் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற டிமாண்டை வைக்காத சிறந்த தலைவர். 2019-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சிப் பொறுப்பிலிருந்து விளகியவர். களத்தில் இறங்கிட்டாருன்னா தயக்கமில்லாமல், தைரியமாக வேலை செய்வார்.  ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட காலத்திலிருந்து சின்ன பையனாக இருந்த ராகுல்காந்தியை பார்த்து வருகிறேன். அவர் தன்னை உருவாக்கிக் கொண்ட விதம் என்பது தனித்துவமானது தான்.

இந்த ஆட்சி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முதலாவதாக ஐந்து ஆண்டுகள் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆர்.என்.ரவியை வாபஸ் வாங்க வேண்டும். நிதித்துறையில் நெருக்கடி தராமல் மாநிலங்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். மாநில தலைமைகளை நசுக்க கூடாது. பத்திரிகை சுதந்திரத்தை பேச்சு எழுத்து சுதந்திரத்தை தாக்குவதை நிறுத்தணும். நிறுத்தா விட்டால் போராட்டம் நடக்கும். எலெக்சன் கமிசன் நேர்மையாக செயல்பட வேண்டும். வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பாகிஸ்தான் உடன் நல்லுறவை பேண வேண்டும். காஸாவில் நடக்கும் கொடுமைகளை கண்டிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.  

தேர்தலுக்கு பிறகான இந்த கருத்துக்கணிப்புகள் எப்படித்தான் எடுக்கப்படுகிறது? 

தேர்தல் நடக்கும் இடத்திற்கே தற்காலிக தன்னார்வலர்களை நியமித்து அவர்களைக் கொண்டு வாக்களித்து வருகிறவர்களிடம் கேட்டு அதனைக் கொண்டு ஒரு தரவினை உருவாக்கி கணிப்பாக வெளியிடுவார்கள். அது சரியாகவும் இருக்க கூடும், தவறாகவும் இருக்கக்கூடும். இந்த முறை கருத்துக்கணிப்புகள் தேர்தலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஆனால் மக்களை உளவியல் ரீதியாக பாதித்தது. அதே சமயத்தில் பங்குச்சந்தையையும் பாதித்தது.