Skip to main content

“இது குறித்து யார் கேள்வி கேட்டாலும் ஐஸ் வைப்பார்கள்” - கனிமொழி எம்.பி. சூசகம்

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
BJP government is deceiving Tamil" - Kanimozhi MP.

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பேசுகையில், “கலைஞர் இருந்திருந்தால், திமுக தொண்டர்களை பார்க்கும் போது,‘நான் உங்களை பார்த்து கொண்டிருந்தாலே போதும். பேச தோன்றவில்லை’ என்று மகிழ்ச்சியோடு நிச்சயம் சொல்லி இருப்பார். இந்த மாநாட்டிற்காக இளைஞர் அணி செயலாளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளை சந்தித்து நிறைய உழைத்து இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதற்கேற்ப தாய் போல் மகிழ்ச்சியோடு பார்த்து அமர்ந்திருக்கிறார். சேலம் என்றாலே அதன் அடையாளமாக இருக்கக்கூடிய வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய கொடி மேடையில் கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கும் போது சொன்னார் நமது கொடியில் கருப்பு, சிவப்பு இருக்கிறது. கருப்பு நிறமானது சமூகத்தில் இருக்க கூடிய அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் இருக்க கூடிய இருண்ட நிலையை காட்டுகிறது. கீழே இருக்கக்கூடிய சிவப்பு என்பது இது எல்லாம் மாற வேண்டும் என்பதை குறிப்பதற்காக இருக்கிறது. இந்த கருப்பும் சிவப்பும், சிவப்பு நிறமாக மாற வேண்டும் என்றால் உதயசூரியன் ஒளியாலே விரட்டி அடிக்கப்படும் என்று தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், அண்ணாவின் கனவு, கலைஞரின் வழியில் ஏறத்தாழ நிறைவேறி விட்டது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் கேட்கலாம் எல்லாம் மாறிவிட்டது இன்னும் ஏன் கொடியில் கருப்பு இருக்கிறது என்று. கொடியில் உள்ள கருப்பு நிறத்தை மாற்றிவிடலாம். ஆனால் வட இந்தியாவில் நிலைமை வேறுமாதிரி உள்ளது. தென்னகத்திலே இருக்கக்கூடிய தமிழ்நாட்டிலேயே சிவப்பு வந்துவிட்டது. ஆனால், வட நாட்டிலே இன்னும் கருப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதை விரட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்த கருப்பை விரட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் இருந்து அனைவரையும் ஒருங்கிணைத்து சென்று கொண்டிருக்கிறார்.

நாளை வட இந்தியாவில் அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை. ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது. இது குறித்து யார் கேள்வி கேட்டாலும் ஐஸ் வைப்பார்கள். ஐஸ் என்பது வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. இதைப் பற்றி தமிழகத்தில் யாரும் பயப்படவில்லை. தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் இந்த மாற்றம் வந்தால் போதாது. இந்தியாவிற்கே மாற்றம் வர வேண்டும், மக்களால் தான் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும். தமிழகத்தில் 40க்கு 40  தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்