Skip to main content

ஒரு நாள் எங்களோடு ஆய்வுக்கு வர தயாரா? அமைச்சர் தங்கமணிக்கு ஈஸ்வரன் சவால்

Published on 02/11/2020 | Edited on 02/11/2020
E.R.Eswaran

 

நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் இடிந்ததற்கு தரம் குறைவே காரணம். நாமக்கல் மாவட்டத்தில் தரம் குறைவாக நடக்கின்ற கட்டுமான பணிகளை இல்லையென்று மறுக்கின்ற அமைச்சர் தங்கமணி ஒரு நாள் எங்களோடு தன் சொந்த தொகுதியில் ஆய்வுக்கு வர தயாரா? என சவால் விட்டுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் தருவாயிலேயே இடிந்து விழுந்திருப்பது அரசு கட்டிடங்கள் கட்டப்படும் தரத்தை எடுத்துரைக்கிறது. மக்கள் உயிர்காக்கும் மருத்துவமனையினுடைய கட்டிடமே இடிந்து விழுந்து பல பேருக்கு காயத்தை ஏற்படுத்தி இருப்பது வேதனையளிக்கிறது. 

 

இந்த உண்மையை மறைத்து அமைச்சர் தங்கமணி அவர்கள் தரம் குறைவாக இருந்ததால் நாங்களே இடித்துவிட்டோம் என்று  சொல்லியிருப்பதை நாமக்கல் மக்கள் நகைச்சுவை கலந்த வேடிக்கையாக பார்க்கிறார்கள். கான்கிரீட் போடும்போது அதை தாங்கி பிடிக்கின்ற சாரம் சரியாக அமைக்கப்படாததன் காரணமாக இடிந்து விழுந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒப்பந்தக்காரரின் பொறியாளர்கள் மற்றும் அரசு பொறியாளர்களுடைய கவனக்குறைவே இதற்கான காரணம். 

 

அமைச்சர் சப்பைக்கட்டு கட்டுவதை விட்டுவிட்டு கவனக்குறைவான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதற்கு பிறகு நடக்கின்ற பணிகளிலாவது கவனத்தோடு அவர்கள் இருப்பார்கள். 

 

இந்த கட்டிடத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து தொடர் ஆய்வுகளை செய்து வந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் தரம் குறைவாக நடக்கின்ற பணிகளை பற்றியும், திறமை வாய்ந்த பொறியாளர்கள் இல்லாததை பற்றியும் பலமுறை புகார் அளித்தும், முதலமைச்சர் வரை கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 

 

P. Thangamani

 

நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்க முடியும். நாமக்கல் மாவட்டத்தில் போடப்படுகின்ற பல ஊராட்சி சாலைகள், அரசு கட்டிடங்கள், உயர்நிலை தண்ணீர் தொட்டிகள், மதில் சுவர்கள், கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்தும் தரம் குறைவாக கட்டப்படுகின்றன. தொடர்ந்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 


தரம் குறைவான அனைத்து பணிகளும் சரி செய்யப்படவில்லை என்று சொன்னால் நாமக்கல் மாவட்ட மக்கள் விடமாட்டார்கள் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மத்திய, மாநில அரசுகளுடைய நிதி என்பது மக்களுடைய வரிப்பணம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய, மாநில அரசின்  திட்டங்களை ஆய்வு செய்து தரத்தை பார்ப்பதற்கு உரிமை இருக்கிறது.

 

நாமக்கல் மாவட்டத்தில் மணல் கொள்ளை நடக்கிறது அரசு தடுக்க வேண்டுமென்று நாங்கள் சொன்ன போது அமைச்சர் தங்கமணி மறுத்தார். மணலை கடத்துகின்ற லாரிகளை ஆங்காங்கே பிடித்து அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்து நிரூபித்தோம். 

 

டாஸ்மாக் கடைகளில் தவறுகள் நடக்கிறது என்று சொன்ன போது அமைச்சர் அதையும் மறுத்தார். கையும் களவுமாக பிடித்து அரசு உயர் அதிகாரிகளிடம் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒப்படைத்து நிரூபித்தார். நாட்டு சர்க்கரை, குண்டு வெல்லம் தயாரிக்கின்ற ஆலைகளில் அஸ்கா சர்க்கரை முழுமையாக கலந்து கலப்பட வெல்லம் தயாரிப்பதன் மூலம் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். 

 

அதேசமயம் மக்கள் நாட்டு வெல்லம் என்று நம்பி வாங்கி ஏமாந்து போகிறார்கள். இதை தடுக்க வேண்டுமென்று எடுத்து சொன்னால் அமைச்சர் நாமக்கல் மாவட்டத்தில் தவறுகளே நடக்கவில்லை என்றார். 

 

நாடாளுமன்ற உறுப்பினரோடு ஒரு குழு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு கலப்பட வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும், சட்டவிரோதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பிடித்து வழக்கு போட செய்தார்கள். 

 

இப்போது அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் நடக்கின்ற சாலைகள், கட்டிடங்கள் போன்ற அரசு திட்ட பணிகள் தரத்தோடு நடைபெறுவதாகவும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் பொய் குற்றச்சாட்டை  கூறுகிறார் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். 

 

நாமக்கல் மாவட்டம் முழுவதும் இனி தரம் குறைவான பணிகளை நீங்கள் செய்ய முடியாது. மாற வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. நாமக்கல் மாவட்டம் முழுவதும் முறைப்படி இல்லாமல் தரம் குறைவாக நடக்கின்ற அரசு திட்டங்களை நாங்கள் நிரூபிக்க முடியும். 

 

அமைச்சர் தங்கமணி அவர்கள் தன்னுடைய சொந்த சட்டமன்ற தொகுதியில் நடக்கின்ற தரம் குறைவான அரசு திட்டங்களை சரி செய்ய வேண்டும். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு நாள் நடந்த ஆய்வில் 28 அரசு திட்டங்கள் தரம் குறைவாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை அமைச்சர் இல்லையென்று மறுத்தால் அவருடைய தொகுதியில் ஒரு நாள் எங்களோடு அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்கு வர தயாரா ?. என சவால் விட்டுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.