Skip to main content

“எனக்கு நானே வருத்தப்பட்டுக்கொண்ட 4ஆம் ஆண்டின் நினைவு நாள் இன்று..” ஆஸ்பயர் சுவாமிநாதன் ட்விட்! 

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

Aspire Swaminathan tweet about Edappadi Palanisamy

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று மறைந்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 5 பிப்ரவரி 2017 அன்று, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதல்வர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ். விலகுவதாக ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆனால், ஆளுநர் அடுத்த ஏற்பாடுகள் முடியும்வரை ஓ.பி.எஸ். முதலமைச்சராக தொடர்வார் என அறிவித்தார். ஆனால், பிப். 7ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். “என்னை கட்டாயப்படுத்தியதால் பதவியிலிருந்து விலக கடிதம் கொடுத்தேன்” என்றார். இது சசிகலாவிற்கு டென்ஷன் ஏத்த, சசிகலா, அவரை பொறுப்புகளிலிருந்து முதலில் நீக்கினார். அதனைத் தொடர்ந்து சசிகலா சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அதன்பின் தர்மயுத்தம், கோரிக்கை, சமாதான பேச்சு வார்த்தை, கோரிக்கைகளுக்கு உடன்பாடு என பல கட்டங்களை கடந்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. 

 

அப்படி இணைந்தும் அவர்களுக்குள் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என அவர்களின் அரசியல் செயல்பாடுகளில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அதன்படி நேற்று (24.11.2021) நடந்த அதிமுக மா.செ. கூட்டத்திலும், அதிமுகவின் வழிகாட்டு குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11இல் இருந்து 18ஆக உயர்த்த வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பு வலியுறுத்தியது. 

 

இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் ஐ.டி.விங்கை கொண்டுவந்தவரும், அதிமுகவிற்கு தனி ஐ.டி.விங்கை உருவாக்கியவருமான, ஆஸ்பயர் சுவாமிநாதன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். இது மீண்டும் அதிமுகவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதிமுக இரண்டாகப் பிரிந்து மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் மற்றும் எம்.ஜி.ஆரின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பெயர் விடுபட்டிருந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என பரவலாக ஒரு பேச்சு இருந்தது. 

 

 

இந்நிலையில் இப்போது ஆஸ்பயர் சுவாமிநாதன், தனது ட்விட்டர் பக்கத்தில், “இரட்டை இலை மீட்பு, மாபெரும் கொண்டாட்டமாம்.. மும்பெரும் விழாவாம்.. கட்சி கொடி ஏற்றுவார்களாம்... மாண்புமிகு அமைச்சர் அறிவிப்பு..  “யாருக்கும் அழைப்பும் இல்லை தகவலும் இல்லை, தலைவர்கள் உட்பட...” மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல..” என்று குறிப்பிட்டிருந்ததையும், அன்றை அழைப்பிதழையும் இன்றைய பதிவில் இணைத்துள்ளார். மேலும், அதில் அவர், ‘ஒரு முதலமைச்சரே என்னை தரம் கெட்டு திட்டி பேசும் அளவிற்கு இருந்ததுபோல என் ட்விட். ஒரு வெள்ளந்தி விவசாயியை  இப்படி கேவலமாக பேசவைத்து விட்டோமே என்று, எனக்கு நானே வருத்தப்பட்டுக்கொண்ட 4ஆம் ஆண்டின் நினைவு நாள் இன்று..’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.