Skip to main content

அதிமுக - அண்ணாமலை இடையே மீண்டும் மோதல்

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

Another issue between AIADMK and Annamalai

 

பேரறிஞர் அண்ணாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் விழுப்புரத்தில் நேற்று அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், "பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை. ஆறு சதவீத மக்கள் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள். மீதம் உள்ள 93% தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பப்பட்ட மக்கள் இன்றைக்கு கூலித் தொழிலாளியாக இருந்திருப்போம். இன்றைக்கு தமிழகம் முன்னேறி இருப்பதற்கு காரணம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. ஆனால் இந்த சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்து பேசியதுடன் தரக்குறைவாகவும் பேசி உள்ளார்.

 

அண்ணாமலையின் வயது 40 கூட இன்னும் முடியவில்லை. அண்ணாமலை சொல்லும் சம்பவம் 1951 இல் மதுரையில் பேசியதாக கூறி உள்ளீர்கள். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, என்று உங்களை நீங்களே அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு எல்லாம் தெரியும் என பேசி உள்ளார். முன்பு ஜெயலலிதாவை விமர்சனம் செய்தார். இன்றைக்கு அண்ணாவை விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலையின் செயல்பாடு கூட்டணி தர்மத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அண்ணா பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என அண்ணாமலை திட்டமிடுகிறாரோ என சந்தேகம் வருகிறது. திமுக உடன் கைகோர்த்து அண்ணாமலை செயல்படுகிறாரோ. அண்ணாமலை செல்வது பாதயாத்திரையா, வசூல் யாத்திரையா எனத் தெரியவில்லை. தன்னுடைய இருப்பைக் காட்ட இதுபோல் செயல்படுகிறார். அண்ணாமலை இது உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. இனியும் தொடர்ந்தால் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என பேசி இருந்தார்.

 

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து பேசுகையில், “போலீஸ்காரனை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டுவது சகஜம் தான். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைத்தையும் வசூலாக தான் பார்க்கிறார்கள். அவர்கள் அமைச்சராக இருந்ததே வசூல் செய்யத்தான். அதனால், நான் நடைபயணம் செல்வது வசூல் செய்யத்தான் என நினைக்கிறார்கள். அந்த டிஎன்ஏவை மாற்ற முடியாது. வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு நேர்மையின் அர்த்தம் தெரியாது. நல்ல போலீஸை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக்கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன். ஆனால் எனது நேர்மையை குறை சொன்னால் சும்மா விட மாட்டேன். இந்த தலைவர் பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்.

 

கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். அதைப் பற்றி எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. 10 ஆண்டுகளாக காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சி.வி. சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. சில தலைவர்களுக்கு கள அரசியல் மாறிவிட்டது என புரிய வைக்க இன்னும் 10 ஆண்டுகள் வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்வில் சிறுமி உயிரிழப்பு; ஆர்டிஓ விசாரணை

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Girl issue in event given by ADMK welfare schemes RTO investigation

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த சூழலில் நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த யுவஸ்ரீ (வயது 14) என்ற சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் சிறுமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி மயங்கி உயிரிழந்தது தொடர்பாக, ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் மூச்சுத் திணறியோ, மிதி பட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மத்தியப் பிரதேச முதல்வராக விஷ்ணு மோகன் யாதவ் தேர்வு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vishnu Mohan Yadav chosen as Chief Minister of Madhya Pradesh

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.