Skip to main content

ஓரங்கட்டப்படும் அண்ணாமலை; லைம் லைட்டுக்கு வரும் வானதி - டெல்லியில் புதிய திட்டம்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

annamalai vs vanathisrinivasan bjp issuse

 

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா பண்ணிடுவேன் என அதிரடி கிளப்பிய அண்ணாமலையின் பேச்சின் பின்னணியில் நிறைய பகீர் தகவல்கள் இருக்கின்றன என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.

 

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கம் போல அண்ணாமலை வருவதற்கு லேட்டானதால், அவருக்காகக் காத்திருக்காமல் கூட்டத்தை ஆரம்பித்தார் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம். கூட்டத்தில் அவர் பேசும்போது, "தமிழகத்தில் 65,000 பூத்கள் இருக்கின்றன. இதில் ஏ-பிரிவு என 25 ஆயிரம் பூத்களை நாம் அடையாளம் கண்டிருக்கிறோம்” என்று ஆரம்பித்து, தேர்தல் பணிகளை எப்படி முன்னெடுக்க வேண்டுமென க்ளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது உரை போர் அடித்ததால் நிர்வாகிகள் பலரும் நெளிந்து கொண்டிருந்தனர். தேர்தல் குறித்து பல கருத்துக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், மதியம் 12:10 மணிக்கு உள்ளே நுழைந்தார் அண்ணாமலை.

 

கூட்டத்திற்கு வந்தவர் சிறிது நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டார். பிறகு மைக் பிடித்த அண்ணாமலை, “தமிழக பா.ஜ.க.வுக்கு நான் மேனேஜர் கிடையாது; மாநில தலைவர்! கட்சியை வளர்க்க என்னிடம் நிறைய வியூகங்கள் இருக்கிறது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என தேசிய தலைமை முடிவெடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக மே மாதம் 10-ந் தேதி வரை பிஸியாக இருப்பேன். அதன்பிறகு என் முடிவை தெரிவிக்கிறேன்” என பரபரப்பாகப் பேச, கூட்டத்தில் ஏகத்துக்கும் சலசலப்பு எதிரொலித்தது.

 

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர், “ராஜினாமா செய்வேன் என்கிற பேச்சே கூடாது. பேசியதை வாபஸ் வாங்குங்கள்” என்றெல்லாம் குரல் கொடுத்தனர். வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, கருப்பு முருகானந்தம் போன்றவர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்தும் மறுத்தும் பேசினர். குறிப்பாக வானதி சீனிவாசன் பேசும்போது, “கூட்டணி குறித்தெல்லாம் முடிவு செய்வது தேசிய தலைமைதான். அவர்கள் எடுக்கும் முடிவினை ஏற்று அதனை வெற்றிபெற வைப்பதுதான் நமது கடமை. கட்சியின் மையக் கமிட்டியில் விவாதிக்க வேண்டிய விசயத்தை இந்த கூட்டத்தில் பேசுவது சரி அல்ல” என்றெல்லாம் விளாசினார்.

 

ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது, அதனைக் கண்டிக்கும் வகையில் சீனியர்கள் பேசியது என ஏக பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஆலோசனைக் கூட்டம். அண்ணாமலை இப்படி பரபரப்பாகப் பேசியதற்கு ஏதேனும் பின்னணிகள் இருக்கிறதா? என நாம் விசாரித்தபோது, “சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற நிலையில் தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அவரைத்தான் ப்ரமோட் செய்து கொள்கிறாரே தவிர கட்சியை வளர்க்கவில்லை. வெறும் சோசியல் மீடியாக்களில் ஸ்டேடஸ் போட்டால் கட்சி வளர்ந்துவிடும் என நினைக்கிறார். சீனியர்களிடமும் நிர்வாகிகளிடமும் பொறுப்பாளர்களிடமும் எதையும் விவாதிப்பதில்லை. அவருக்கு ஜால்ரா தட்டுகிற நாலு பேர்தான் கட்சி என நினைத்துக்கொண்டு அவர்களிடம் மட்டுமே ஆலோசிக்கிறார். தலைவர் ஆனதிலிருந்தே இப்படித்தான் கட்சியை நடத்தி வருகிறார் அண்ணாமலை.  இதனால் கட்சியினருக்கும் இவருக்குமான இடைவெளிகள் அதிகரித்துவிட்டன. இந்த இடைவெளிதான் பா.ஜ.க.விலிருந்து பலரும் அ.தி.மு.க.வுக்கு செல்ல உந்தித் தள்ளியது. இதையெல்லாம் தேசிய தலைமைக்கு தமிழக தலைவர்கள் ரிப்போர்ட் அனுப்பியபடியே இருந்தனர்.

 

தமிழகத்திலிருந்து ஓரிரு எம்.பி.க்களையாவது இந்த முறை பெற்றாக வேண்டும் என திட்டமிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைமைகள், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என முடிவெடுத்துள்ளனர். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தால் பட்டியலின  மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் கூட்டணிக்கு கிடைக்காமல் போகும். அதற்கு பதிலாக அதனை ஈடுகட்டும் வகையில் மற்ற சமூகத்தினரின் வாக்குகளும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்பதை கணக்கிட்டே அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலையின் சர்வாதிகார தொனியிலான அரசியல் தேசிய தலைமையின் முடிவுகளுக்கு செக் வைப்பதாக மோடியிடமும் அமித்ஷாவிடமும் கொடுக்கப்படும் ரிப்போர்ட்டுகள் அலறின. இதனையடுத்துத்தான் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்த அமித்ஷா, அ.தி.மு.க. வுடன்தான் கூட்டணி என்பதை அழுத்தமாக சொல்லி வாருங்கள் என உத்தரவிட்டார். அதன்படி கிருஷ்ணகிரி கூட்டத்தில் இதனைத் தெரிவித்த ஜே.பி.நட்டா, அண்ணாமலையிடம் மட்டும் தனியாக, “உங்கள் தலைமை மீது மோடியும் அமித்ஷாவும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் நீங்கள் டெல்லிக்கு அழைக்கப்படுவீர்கள். தலைவர் பதவியிலிருந்து உங்களை நீக்கவும் ஒரு அஜெண்டா மேலிடத்தில் இருக்கிறது” என எச்சரித்தார். அப்போதே அண்ணாமலைக்கு உதறல் எடுத்துவிட்டது.

 

அதன்பிறகு டெல்லியில் தனக்கு எதிராக நடப்பவைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை, "அவர்களாக நீக்குவதற்கு முன்பு தேசிய தலைமையிடம் ஒரு மோதல் போக்கினை உருவாக்கி வைத்துக் கொள்வோம் என்கிற திட்டமிடலில்தான், ராஜினாமா அஸ்திரத்தை வீசினார்” என்று விவரிக்கிறார்கள் அண்ணாமலையின் உள்ளும் புறமும் அறிந்த சீனியர்கள்.

 

உளவுத்துறை வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது, "சமீபத்தில் ஜி.கே.வாசனை டெல்லிக்கு அழைத்து அவரிடம் 30 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் ஆலோசித்தார் பிரதமர் மோடி. தமிழக அரசியல், நாடாளுமன்ற தேர்தல், தி.மு.க. நிலவரம் என நிறைய ஆங்கிளில் விவாதித்திருக்கிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நீடித்தால் மட்டுமே அது பா.ஜ.க.வுக்கு லாபம். கூட்டணியை உறுதிப்படுத்துவதில் நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் என்பதால், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தித்தான் வாக்கு கேட்க முடியும் என்பதால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு அது பலம். எடப்பாடிக்கும் அண்ணாமலைக்குமிடையே தனிப்பட்ட அரசியல் ஓடுவது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல. அண்ணாமலையின் அரசியல், கூட்டணிக்குள் சிக்கலைத்தான் ஏற்படுத்துகிறது. எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் என்னிடம் பேசும்போது இதனைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் சரியான தீர்வை நீங்கள்தான் தர வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் ஜி.கே.வாசன்.

 

இது மட்டுமல்ல; ஏற்கனவே உளவுத்துறையிடமிருந்து அண்ணாமலையை பற்றி நிறைய ரிப்போர்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தலைவர் பதவியை வைத்து சுமார் 300 கோடிக்கும் அதிகமாக நிறைய சம்பாதித்துவிட்டார். தேர்தலில் ஜெயிக்க பணம் இருந்தால் மட்டுமே முடியும்; கொள்கையும், பா.ஜ.க. தலைவர் பதவியும் உதவாது என நம்புகிறார் அண்ணாமலை. அதற்காகவே கோடிகளை சேமித்து வைக்கிறார். அப்படி சேமித்ததுதான் 300 கோடி ரூபாய்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்துவிட வேண்டும்; அதனை வைத்து மத்தியில் அமைச்சராகிவிட வேண்டும்; அந்த இமேஜை வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் கனவு; அஜெண்டா எல்லாம்! இதில் தனக்கு எதிராக தேசிய தலைமை ஏதேனும் முடிவெடுத்தால் தனிக்கட்சி ஆரம்பிப்பது என்கிற மூடில் இருக்கிறார் அண்ணாமலை. இதனை நோக்கி அண்ணாமலையை நகர்த்த தி.மு.க.வின் முக்கிய அதிகார மையமும் தூபம் போட்டுக்கொண்டிருக்கிறது. அந்த அதிகார மையத்துடனான நெருக்கம் கடந்த பல மாதங்களாக ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றத் துடிக்கும் தி.மு.க., எதிர்க்கட்சிகளின் வாக்குகள், ஆளும் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை சிதறடிக்கும் யுக்தியை திட்டமிடுகிறது. அந்த வகையில்தான் அண்ணாமலையை தனிக்கட்சி ஆரம்பிக்க வைக்கவும் அதற்கு நிதி உதவி பண்ணுவதாகவும் ஆசைகளைத் தூண்டி விடுகிறது அந்த அதிகார மையம். இதில் மயங்கியுமிருக்கிறார் அண்ணாமலை.

 

உளவுத்துறையின் இத்தகைய ரிப்போர்ட்டுகளை வைத்து அண்ணாமலை மீது மோடியும் அமித்ஷாவும் கடும் கோபத்திலிருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் டெல்லிக்கு வரவழைக்கப் பட்டிருக்கும் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை அமித்ஷா வாங்குவார். கர்நாடக தேர்தல் முடிந்ததும் அண்ணாமலை நீக்கப்படுவார்” என்று விவரிக்கிறார்கள் உளவுத்துறையினர். இதற்கிடையே அண்ணாமலை நீக்கப்படும் பட்சத்தில், புதிய தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், நரேந்திரன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் வானதிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக சொல்கிறது கமலாலய வட்டாரம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.