Skip to main content

புல்லட் ரயிலுக்கு டிக்கெட் உங்க பணமா? - அண்ணாமலை 

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Annamalai Reply to cm Stalin's Comment on Bullet Train

 

8 நாள் அரசு முறைப் பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனு ஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து தனது இரண்டு நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு புல்லட் ரயிலில் பயணித்துள்ளார். 

 

அது தொடர்பாக புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர், “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் முதல்வர் புல்லட் ரயில் குறித்து பேசியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நான் புல்லட் ரயிலில் போகிறேன்; இந்தியாவிற்கும் அதை கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். நாங்களும் புல்லட் ரயிலில் சென்றிருக்கிறோம்; அதில் ஒரு டிக்கெட்டின் விலை என்னவென்று தெரியுமா? புல்லட் ரயிலில் ஒரு டிக்கெட் விமான டிக்கெட்டின் விலையில் 80 சதவீதம் இருக்கும். ஏன் முதல்வர் அதை சொல்லவில்லை. வந்தே பாரத்தின் டிக்கெட்டின் விலை சாதாரண சாமானியன் பயன்படுத்தும் ஆட்டோவில் போகும் விலை போன்று இருக்கிறது. சென்னை - கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 3 மாதத்திற்கு டிக்கெட்டே இல்லை. நான் ஒருவரிடம் கேட்டேன் எப்படி அண்ணா மூன்று மாதத்திற்கு முன்பே புக் பண்றீங்க என்று? அதற்கு அவர் சும்மா எப்படி இருக்கு என்று பாத்துட்டு வரலாம்னு புக் பண்ணேன் என்கிறார்.

 

ஆக அந்த அளவிற்கு வந்தே பாரத் ரயில் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. காட்சிக்கு மட்டும் புல்லட் ரயில் மாதிரி இல்லாமல், முழுமையாகவும் புல்லட் ரயில் வரவேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். மும்பை டூ அகமதாபாத் புல்லட் ரயில் வரவுள்ளது. பிரதமர் மோடியின் மேக் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்தையும் கொண்டு வந்து, அதன் விலையை குறைத்து சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. நீங்கள் செல்லும் புல்லட் ரயிலில் டிக்கெட்டுக்கு பணம் உங்களுடையது இல்லை. எங்களுடைய பணத்தில்தான் நீங்கள் புல்லட் ரயிலில் பயணம் செய்கிறீர்கள். உங்களுடைய அதிகாரி டிக்கெட் எடுக்கிறார். அதை வைத்து நீங்கள் பயணம் செய்கிறீர்கள். ஆனால் நாங்க பூ விற்பவர்கள், மாங்கா விற்பவர்கள், தேங்கா விற்பவர்களை எல்லாம் எப்படி புல்லட் ரயிலில் அழைத்துச் செல்லலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

 

பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்த சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயிலில் எக்னாமிக் க்ளாசில் ரூபாய் 1365 என்பதும் சாதாரண ரயிலில் கோவை டூ சென்னை ரூ.325 என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் பிரச்சாரம்! (படங்கள்)

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநிலத் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். 

அந்த வகையில், திமுக வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி ஜி. கே.எம். காலனி, பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது,  கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் வாக்களிக்கும்படி, கேட்டுக் கொண்டார்.

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.