Skip to main content

அண்ணாமலை ரகசிய பரிகார பூஜை! கமலாலயத்துக்குள் குபீர் புகை! 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

annamalai kamalalayam

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் இன்று (08/06/23) ரகசிய பூஜை நடத்தியிருக்கிறார். 

 

சென்னையில் உள்ள பாஜக கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலைக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் தனித்தனி அறைகள் இருக்கிறது. தனது அறையை நவீனப்படுத்த விரும்பினார் அண்ணாமலை. அதனைப் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தனது அறையைக் காலி செய்துவிட்டு அமைச்சர் முருகனின் அறையை ஆக்கிரமித்துக் கொண்டார் அண்ணாமலை. முருகனும் கமலாலயத்துக்கு வருவதே இல்லை என்பதால் அவரது அறையை ஆக்கிரமித்துக் கொள்ள அண்ணாமலைக்கு வசதியாக இருந்தது. 

 

annamalai kamalalayam

 

இந்த நிலையில், சில மாதங்களாக நடந்து வந்த புதுப்பிக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில், 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது அறைக்கு இடம் மாறியிருந்தார் அண்ணாமலை. புதுப்பிக்கப்பட்ட அறைக்கு அவர் இடம் மாறியதில் இருந்தே நிறைய சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறார். குறிப்பாக, எந்த ஒரு காரியத்தை தொட்டாலும் அது சக்சஸ் ஆகவில்லை. கட்சியின் தேசியத் தலைவர்களிடம் அடிக்கடி திட்டு வாங்குகிறார். அவரிடம் கொடுக்கப்பட்ட எந்த கூடுதல் பொறுப்பிலும் அவர் சோபிக்கவில்லை. அவருக்கு எதிரான புகார்கள் தொடர்ந்து மேலிடத்துக்கு சென்றபடி இருக்கிறது. இதனால், அவர் மீதான நம்பிக்கையை மேலிடம் இழந்து வருகிறது. இதனால், தனது தலைவர் பதவிக்கே ஆபத்து வரலாம் என்று உணர்கிறார் அண்ணாமலை. 

 

இந்த மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை, ஒரு ஆஸ்தான ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனைக் கேட்க, "நீங்கள் பயன்படுத்தும் அறையில் ஒரு பரிகார பூஜை நடத்துங்கள். ஓஹோன்னு இருக்கும் உங்கள் அரசியல்" என்று யோசனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் இதனை அண்ணாமலை கூற, "ஆமாம்... ஆமாம்... பரிகார பூஜை செய்தால் எல்லாம் நலமாகும்" என அவர் பங்குக்கு தெரிவித்துள்ளார். 

 

annamalai kamalalayam

 

இதனைத் தொடர்ந்து, அந்த பரிகார பூஜையை நடத்த அண்ணாமலையும் கேசவ விநாயகமும் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அதன்படி இன்று விடியற்காலை 4 மணியிலிருந்து 6 மணி வரை இந்த பரிகார பூஜை கமலாலயத்தில் ரகசியமாக நடந்துள்ளது. இதில் அண்ணாமலையும் கேசவ விநாயகமும் கலந்து கொண்டனர். கட்சிக்காரர்கள் யாரையும் அழைக்காமல் பூஜையை நடத்தி முடித்திருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Next Story

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tamil Nadu BJP executives meeting with Prime Minister Modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.