
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தினகரன் கட்சியான அமமுகவிலிருந்து பலரும் வெளியேறி திமுகவில் இணைந்துவருகிறார்கள். இதனால் அக்கட்சி கலகலத்துக் காணப்படுகிறது. கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் குறித்து கவலைப்படாமல் மௌனம் கடைப்பிடித்துவருகிறார் தினகரன். இதுகுறித்து, கட்சியின் நிர்வாகிகள் பலரும் தினகரனிடம் விவாதிக்க முயற்சிக்கிறபோதெல்லாம் அவர்களைச் சந்திக்க மறுத்துவிடுகிறார் தினகரன்.
இந்தச் சூழலில், தினகரன் கட்சியின் அம்மா பேரவை இணைச் செயலாளராகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி தலைவராகவும், கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்த தாம்பரம் நாராயணன், தற்போது அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக தினகரனுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நீங்கள் கடைப்பிடிக்கும் நீண்ட மௌனமும், செயலற்ற நிலையும் என்னைப் போன்ற தீவிர செயல்பாடு உடையவர்களுக்கு உடன்பாடானதல்ல. அடுத்து என்ன? இலக்கு ஏதுமின்றி செயலற்ற நிலையில் இருப்பது, என்னைப் போன்றவர்களுக்கு சரிபட்டு வராது என்பதால் விலகுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் தாம்பரம் நாராயணன்.