ddd

Advertisment

''முதல்வர் வேட்பாளர் பதவியை எந்தச் சூழலிலும் விட்டுத்தர மறுத்து வருகிறார் எடப்பாடி. அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பி.எஸ், கட்சிக்கு வழிகாட்டும் குழுவை அமையுங்கள்; அதன் பிறகு முதல்வர் வேட்பாளரை முடிவு செய்து கொள்ளலாம் என்று அடம் பிடிக்கிறார்.

இதனால் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அதிகாரப் போட்டி வலுத்த நிலையில் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் சீனியர்கள் இறங்கினர். முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பஞ்சாயத்தை 7ஆம் தேதிக்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க.வின் சீனியர்கள் போராடி வருகின்றனர். எடப்பாடியிடம் பேசிய அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான். இந்த விசயத்தில் கட்சியின் பெரும்பான்மை ஆதரவு உங்களுக்குத்தான் இருக்கிறது. ஆனால், வழிகாட்டும் குழு அமைக்க வேண்டும் என்கிற ஓ.பி.எஸ்.சின் கருத்து தவறானதல்ல! அப்படி ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ddd

Advertisment

எடப்பாடியை சந்தித்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கமும் இதே கருத்தினை வலியுறுத்தி சமாதானம் செய்துள்ளனர். மேலும், எடப்பாடியை சந்திக்கும் சீனியர் அமைச்சர்கள், வழிகாட்டும் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனில் அதுவே ஓ.பி.எஸ்.சை வலிமையாக்கும். இது தேர்தல் நேரம். வாய்ப்பு கிடைக்காது என நினைப்பவர்கள், ஏற்கனவே பதவி இழந்தவர்கள், கட்சியில் ஓரங்கட்டப்பட்டவர்கள் என பலரும் ஓ.பி.எஸ் பின்னால் செல்லும் சூழல் உருவானால் அது உங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதை விட அ.தி.மு.க.வை பலகீனப்படுத்தும். அதுவே தி.மு.க.வுக்கு சாதகமாகலாம். அதனால், சமாதானத்துக்கு ஒப்புக்கொள்ளுங்கள் என மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.

இப்படிச் சமாதானம் பேசுவதற்குக் காரணம், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; அதே சமயம் அவரிடம் மட்டுமே மொத்த அதிகாரமும் குவிவதை சீனியர்கள் விரும்பவில்லை என்பதுதான்.

இந்த நிலையில், இருதரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியும்; வழிகாட்டும் குழுவின் தலைவராக ஓ.பி.எஸ்.சும் தேர்வு செய்யலாம் என்கிற ஒரு ஃபார்முலாவை இருவரிடமும் முன் வைத்துள்ளனர். அந்த ஃபார்முலாவுக்கு ஆதரவு அதிகம் உள்ளது. இதனை ஓ.பி.எஸ் ஏற்றுக் கொள்ளும் நிலையில், எடப்பாடி முரண்டு பிடிக்கிறார். இருப்பினும் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது'' என நேற்று நக்கீரன் இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம்.

Advertisment

Ad

அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்த 7ஆம் தேதியான இன்று காலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வழிகாட்டுக் குழுவில் உள்ளவர்களின் பெயரை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.