Skip to main content

அதிமுக பெண் கவுன்சிலர்கள் கடத்தல்? - 'தண்ணீ ' காட்டிய திமுக

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

AIADMK abducts female councilors?

 

பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு பெண் கவுன்சிலர்கள் இருவர் கடத்தப்பட்டதாக அதிமுக பிரமுகர் புகார் கொடுக்க, யாரும் கடத்தவில்லை எனப் பெண் கவுன்சிலர்கள் வாக்குமூலம் அளிக்க, சேலம் அரசியல் களத்தில் பரபரப்பும் சர்ச்சையும் ஒருசேர ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் இருந்து வந்தார். மொத்தம் 13 கவுன்சிலர்கள் கொண்ட இந்த ஒன்றியத்தில் திமுக தரப்பில் 5, அதிமுக தரப்பில் 6, பாமக 1, இ.கம்யூ., 1 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், தலைவர் பதவியைக் கைப்பற்றத் திட்டமிட்ட திமுக, தங்கள் தரப்புக்கு ஆதரவாக கவுன்சிலர்களை இழுக்கும் வேலைகளைச் செய்தது. அதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.

 

fafaf
          சுரேஷ்குமார்

பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் திமுக பொறுப்பாளரான பாரப்பட்டி சுரேஷ்குமாரை எப்படியும், அந்த ஒன்றியக்குழுவின் தலைவராக ஆக்கிவிட வேண்டும் என்ற மும்முரத்தில் கட்சியினர் ஜெகநாதனுக்கு எதிராக ஆதரவு திரட்டும் வேலைகளைக் கடந்த மூன்று மாதங்களாகச் செய்து வந்தனர். ஜெகநாதனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்த வேளையில், அதை எதிர்த்து ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜன. 21) நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன. பந்து தனது கையைவிட்டு நழுவிச் சென்றதை உணர்ந்து கொண்ட ஜெகநாதன், தனது கட்சியைச் சேர்ந்த பூங்கொடி, சங்கீதா ஆகியோரை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்குச் சென்று கொண்டிருந்தார். 

 

ஏனெனில், திமுகவின் பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு ஆதரவாக இவர்கள்தான் செயல்பட்டனர் என்பதை அறிந்திருந்தார் ஜெகநாதன். பழம் நழுவி பாலில் விழும் நேரத்தில் கவுன்சிலர்கள் மாயமானதை அறிந்த பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பு, குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை மடக்கினர். 20க்கும் மேற்பட்ட கும்பல் ஜெகநாதன் காரை மறித்து, பெண் கவுன்சிலர்கள் இருவரையும் தங்களது காரில் ஏற்றிச்சென்றனர். தனக்கு எதிரான வாக்கெடுப்பு கூட்டத்தை முறியடித்துவிடும் நோக்கத்தில் மனக்கணக்குப் போட்டு வைத்திருந்த ஜெகநாதன், இந்தச் சம்பவத்தால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக குமாரபாளையம் காவல்நிலையத்தில் தன் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச்சென்று விட்டதாகப் புகார் அளித்தார்.  

 

AIADMK abducts female councilors?
         ஜெகநாதன்

 

இதுகுறித்து ஜெகநாதன் கூறுகையில், ''நான் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் அதிமுக செயலாளராகவும், ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறேன். என் மீது ஜன. 21ம் தேதியன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வாக்கெடுப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக, எங்கள் கட்சியைச் சேர்ந்த  (அதிமுக) கவுன்சிலர்கள் 5 பேரை அழைத்துக் கொண்டு பவானி கூடுதுறையில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்துவிடலாம் எனக்கருதி, கார்களில் சென்று கொண்டிருந்தோம். ஒரு காரில் நானும், பெண் கவுன்சிலர்கள் சங்கீதா, பூங்கொடி உள்ளிட்ட நான்கு பேரும் இருந்தோம். மற்றொரு காரில் இன்னும் இரண்டு கவுன்சிலர்கள் இருந்தனர். குமாரபாளையம் அருகே கத்தேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் கார்களில் வந்து எங்களை வழிமறித்தனர்.  

 

அந்தக் கும்பல் கையில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை தலை முடியைப் பிடித்து இழுத்துச்சென்று அவர்கள் காரில் கடத்திச்சென்று விட்டனர். என்னை கீழே இறங்க விடாமல் கார் கதவை மூடிவிட்டனர். பிளேடு வைத்துக்கொண்டு மிரட்டினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார் ஜெகநாதன்.

 

asfaf
          ஜெயசங்கரன்

 

இது ஒருபுறம் இருக்க, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜமுத்து, ஜெயசங்கரன், சுந்தரராஜன், நல்லதம்பி, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு அதிமுக செயலாளர் ஜெகநாதன், சேலம் ஒன்றிய செயலாளர் வையாபுரி மற்றும் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதிமுக எம்எல்ஏ ஜெயசங்கரன் ஊடகங்களிடம் கூறுகையில், “கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. கடத்தல் கும்பல் தாக்கியதில் பெண் கவுன்சிலர்களுக்கு கழுத்திலும், கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்களுக்கே இந்தக் கதி என்றால், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

 

திமுகவிற்கு தேர்தலில் ஜெயிக்க திராணி இல்லை. கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் அரசுப் பணியில் உள்ளனர். அதை வைத்து திமுகவினர் மிரட்டி, கடத்திச்சென்று விட்டனர். இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறோம். எங்கள் கவுன்சிலர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.  

 

safdasfd
               பூங்கொடி, சங்கீதா

 

இந்தப் பரபரப்புக்கு இடையே, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. அதில், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அதிமுக பெண் கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் நிவேதா உள்பட 10 பேர் ஜெகநாதனுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை ஜெகநாதன் இழந்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோர் கூறுகையில், “எங்களை யாரும் கடத்திச்செல்லவில்லை. நாங்களாக சுய விருப்பத்தின்பேரில்தான் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தோம்” என்று மட்டும் சுருக்கமாகக் கூறினர். அரசியல் சதுரங்கத்தில் அதிமுக ஒரு கணக்குப்போட, அதை திமுகவினர் முறியடித்து வெற்றி பெற்றுள்ளனர். இச்சம்பவம், சேலம் மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.