Skip to main content

“இப்படியெல்லாம் பண்ணுனா இது என்ன நல்ல ஆட்சியா?” - திமுகவுக்கு எதிராக கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

nn

 

விருதுநகரில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தன் மனக்குமுறலை வெளிப்படையாகக் கொட்டிவிட்டார்.

 

அவர் பேசுகையில், “திமுகவை யார் யாரெல்லாம் எதிர்க்கிறாங்களோ, அவங்க மேல வழக்கு போட ரெடியா இருக்காங்க. ஒன்னுமே இல்லாத கேஸ என்மேல போட்டு, ஒரு ஆயிரம் போலீஸ வச்சு விரட்டுனாங்க. நானும் 21 நாள் அப்படியே டமிக்கி டிமிக்கின்னு ஆடிப் பார்த்தேன். அங்கிட்டும் இங்கிட்டும் வருவாங்க வருவாங்கன்னு பார்த்துட்டு, விட்டுவிளாசி டப்புன்னு அங்கிட்டு போயிருவேன். 2 நிமிஷத்துல 3 நிமிஷத்துல தப்பிச்சி போயிருவேன். இந்த வேலைதான் நடந்துச்சு. எல்லாம் டகால்டி வேலைதான்.  எனக்குள்ள ஒரே பலவீனம் எங்கயாவாது பெரிய கோவில் இருந்தா, அங்க சாமி கும்பிட போயிருவேன். கரெக்ட்டா அங்க அன்னைக்கு சாமி கும்பிட வருவான்னு கணக்கு பண்ணி ரெடியா நின்னுட்டாங்க. நல்லா சாமியார் வேஷ்டி கட்டி சாமி கும்பிட போனேன். அதுனால ஒன்னும் இல்ல. திமுக வந்தா புடிச்சி உள்ள வைப்பாங்கன்னு தெரியும். ஏன்னா நான் அவ்ளோ பேசிருக்கேன். சிறப்பா பேசிருக்கேன். ரொம்ப ரொம்ப சிறப்பா பேசிருக்கேன். அதுனால அவங்க புடிச்சி உள்ள போடணும்னு நெனச்சாங்க. புடிச்சி உள்ள போட்டாங்க.  

 

ஜெயில்ல ஒரு ஊறுகா மட்ட கூட கொடுக்காம வச்சிக்கிட்டாங்க. பாதுகாப்பா வச்சிகிட்டாங்க. சுப்ரீம் கோர்ட் பெயில்ல வெளிய வந்தேன். இதுனால என்ன ஆயிடப்போகுது? கொன்னா போட முடியும் நீங்க? அண்ணாதிமுக தொண்டன அழிச்சிற முடியாதுல? நாளைக்கு இதே நெலம உங்களுக்கு திரும்பாதா? நெலம எப்ப வேணும்னாலும் திரும்பலாம். நான் பத்து வருஷம் மந்திரியா இருந்தேன். 15 வருஷம் நகராட்சி வைஸ்-சேர்மனா இருந்தேன். எத்தனை மந்திரிசபை கூட்டத்துல கலந்திருப்பேன்? எத்தனை கலெக்ட்ரேட் மீட்டிங் நடத்திருப்பேன். மந்திரியா இருந்தவங்க மேலயே இப்படி பொய்வழக்கு போட்டீங்கன்னா.., இதேமாதிரி நாளைக்கு நாங்களும் பண்ணுனா என்ன ஆகும்?

 

இன்னைக்கு முதலமைச்சரா இருக்கிற ஸ்டாலினுக்கு பழிவாங்கணுங்கிற எண்ணம்தான் இருக்கு. பழிவாங்கணும்., அண்ணாதிமுகவுல வேகமா இருக்கிற அமைச்சர்கள பழிவாங்கணும். உள்ள வைக்கணும். இன்னைக்கும் நான் வந்து கண்டிஷன் பெயில்லதான் இருக்கேன். இந்த மாவட்டத்தவிட்டு நான் வெளியே போகணும்னா காவல்துறைக்கு தகவல் சொல்லிட்டு, லெட்டர் கொடுத்துட்டுத்தான் போகமுடியும். ஒரு வருஷம் ஆச்சு. என்னைய என்னமோ சந்தனவீரப்பன பிடிச்ச மாதிரி விரட்டி விரட்டிட்டு திரியுறாங்க. இப்படியெல்லாம் பண்ணுனா இது என்ன நல்ல ஆட்சியா?” என்று கொந்தளிந்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.