Skip to main content

“இப்படியெல்லாம் பண்ணுனா இது என்ன நல்ல ஆட்சியா?” - திமுகவுக்கு எதிராக கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

nn

 

விருதுநகரில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தன் மனக்குமுறலை வெளிப்படையாகக் கொட்டிவிட்டார்.

 

அவர் பேசுகையில், “திமுகவை யார் யாரெல்லாம் எதிர்க்கிறாங்களோ, அவங்க மேல வழக்கு போட ரெடியா இருக்காங்க. ஒன்னுமே இல்லாத கேஸ என்மேல போட்டு, ஒரு ஆயிரம் போலீஸ வச்சு விரட்டுனாங்க. நானும் 21 நாள் அப்படியே டமிக்கி டிமிக்கின்னு ஆடிப் பார்த்தேன். அங்கிட்டும் இங்கிட்டும் வருவாங்க வருவாங்கன்னு பார்த்துட்டு, விட்டுவிளாசி டப்புன்னு அங்கிட்டு போயிருவேன். 2 நிமிஷத்துல 3 நிமிஷத்துல தப்பிச்சி போயிருவேன். இந்த வேலைதான் நடந்துச்சு. எல்லாம் டகால்டி வேலைதான்.  எனக்குள்ள ஒரே பலவீனம் எங்கயாவாது பெரிய கோவில் இருந்தா, அங்க சாமி கும்பிட போயிருவேன். கரெக்ட்டா அங்க அன்னைக்கு சாமி கும்பிட வருவான்னு கணக்கு பண்ணி ரெடியா நின்னுட்டாங்க. நல்லா சாமியார் வேஷ்டி கட்டி சாமி கும்பிட போனேன். அதுனால ஒன்னும் இல்ல. திமுக வந்தா புடிச்சி உள்ள வைப்பாங்கன்னு தெரியும். ஏன்னா நான் அவ்ளோ பேசிருக்கேன். சிறப்பா பேசிருக்கேன். ரொம்ப ரொம்ப சிறப்பா பேசிருக்கேன். அதுனால அவங்க புடிச்சி உள்ள போடணும்னு நெனச்சாங்க. புடிச்சி உள்ள போட்டாங்க.  

 

ஜெயில்ல ஒரு ஊறுகா மட்ட கூட கொடுக்காம வச்சிக்கிட்டாங்க. பாதுகாப்பா வச்சிகிட்டாங்க. சுப்ரீம் கோர்ட் பெயில்ல வெளிய வந்தேன். இதுனால என்ன ஆயிடப்போகுது? கொன்னா போட முடியும் நீங்க? அண்ணாதிமுக தொண்டன அழிச்சிற முடியாதுல? நாளைக்கு இதே நெலம உங்களுக்கு திரும்பாதா? நெலம எப்ப வேணும்னாலும் திரும்பலாம். நான் பத்து வருஷம் மந்திரியா இருந்தேன். 15 வருஷம் நகராட்சி வைஸ்-சேர்மனா இருந்தேன். எத்தனை மந்திரிசபை கூட்டத்துல கலந்திருப்பேன்? எத்தனை கலெக்ட்ரேட் மீட்டிங் நடத்திருப்பேன். மந்திரியா இருந்தவங்க மேலயே இப்படி பொய்வழக்கு போட்டீங்கன்னா.., இதேமாதிரி நாளைக்கு நாங்களும் பண்ணுனா என்ன ஆகும்?

 

இன்னைக்கு முதலமைச்சரா இருக்கிற ஸ்டாலினுக்கு பழிவாங்கணுங்கிற எண்ணம்தான் இருக்கு. பழிவாங்கணும்., அண்ணாதிமுகவுல வேகமா இருக்கிற அமைச்சர்கள பழிவாங்கணும். உள்ள வைக்கணும். இன்னைக்கும் நான் வந்து கண்டிஷன் பெயில்லதான் இருக்கேன். இந்த மாவட்டத்தவிட்டு நான் வெளியே போகணும்னா காவல்துறைக்கு தகவல் சொல்லிட்டு, லெட்டர் கொடுத்துட்டுத்தான் போகமுடியும். ஒரு வருஷம் ஆச்சு. என்னைய என்னமோ சந்தனவீரப்பன பிடிச்ச மாதிரி விரட்டி விரட்டிட்டு திரியுறாங்க. இப்படியெல்லாம் பண்ணுனா இது என்ன நல்ல ஆட்சியா?” என்று கொந்தளிந்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.