Skip to main content

நம்மள நிம்மதியா இருக்கவிடமாட்டானுங்க போலயே... அமைச்சருக்கு எதிராக நோட்டீஸ்... அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! 

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் நடத்துவது குறித்து கட்சியினரின் ஆலோசனைகள், குறைகளைக் கேட்பதற்காக கடந்த 10—ஆம் தேதி சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். முன்னிலையில் இந்தக் கூட்டம் நடந்ததென்றால், அதற்கு முதல் நாள், அதாவது பிப்.09—ஆம் தேதி தஞ்சையில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏகப்பட்ட சலசலப்புகள் சலங்கை கட்டி ஆடின.

 

admk



தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் கும்பகோணம் காஞ்சி சங்கரா மண்டபத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட கூட்டம் என்றாலும் ஒரு கணக்குடன் வந்திருந்தார் தெற்கு மா.செ.வும் எம்.பி.யுமான வைத்திலிங்கம். முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஒ.செ.க்கள், ந.செ.க்கள், நிர்வாகிகள் என மண்டபமே திக்குமுக்காடியது. "என்னடா இது அதிசயமா இருக்கு, துரைக்கண்ணு கூட்டும் கூட்டத்திற்கு இவ்வளவு கூட்டம் வராதே. இன்னைக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்குன்னா என்னமோ நடக்கப் போகுது' என ர.ர.க்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

தொண்டையைச் செருமிக் கொண்டு வரவேற்புரை நிகழ்த்த வந்தார் கும்பகோணம் ந.செ.வும் மாஜி எம்.எல்.ஏ.வுமான ராமனாதன். அமைச்சர் அவர்களே, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களே மற்றும் கழகத்தின் நிர்வாகிகளே உங்களையெல்லாம் இருகரம் கூப்பி...  என பேசிக்கொண்டிருந்தபோது, நான்கு பேர் நான்கு பேப்பர் பண்டல்களைக் கொண்டு வந்து இறக்கினார்கள்.  ஆஹா ஆரம்பிச்சுட்டானுங்களா...  என கூட்டத்தில் முணுமுணுப்பும் சலசலப்பும் கிளம்பியது.

இதை மேடையில் இருந்து பார்த்த அமைச்சர் துரைக்கண்ணு, "என்னத்த கொண்டாந்து இறக்கியிருக்கானுங்க போய் பாருய்யா'’என தனது உதவியாளருக்கு உத்தரவிட்டார். பதறியடித்து ஓடி வந்து பண்டலைப் பிரித்து ஒரு நோட்டீசை படிக்க ஆரம்பித்தார் உதவியாளர். நோட்டீசில் இருந்த வாசகங்கள் அத்தனையும் அமைச்சருக்கு அர்ச்சனை பண்ணியிருந்தது. உடனே ஒரே ஒரு நோட்டீசை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, நான்கு பண்டல்களையும் தூக்கிக் கொண்டு போய் யார் கண்ணிலும் கையிலும் சிக்காமல் மறைத்துவிட்டார். அந்த ஒரு நோட்டீசை மட்டும் அமைச்சரிடம் கொடுத்துவிட்டார் உதவியாளர்.

 

admk



படித்துப் பார்த்த அமைச்சருக்கும் பக்கென்றாகிவிட்டது. "நம்மள நிம்மதியா இருக்கவிடமாட்டானுங்க போலயே' என்ற பீதியுடன், "எல்லாரும் சீக்கிரமா பேசி முடிங்க, அவசரமா நான் சென்னைக்கு கிளம்பணும்'' என பரபரத்தார். கூட்டத்தில் பேசிய முக்கால்வாசிப் பேர், ஜாடைமாடையாக அல்ல நேரடியாகவே அமைச்சரை அட்டாக் பண்ணி பேசி பீதி கிளப்பினார்கள்.


திருவையாறு மாஜி எம்.எல்.ஏ.வும் பூதலூர் ஒ.செ.வுமான ரெத்தினசாமி பேசும்போது, “தஞ்சாவூர் அ.தி.மு.க.ன்னாலே அது வைத்திலிங்கம்தான் என்ற பேரை மாற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காவே சிலர் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கட்சி ஆட்சி இருந்தும் உள்ளாட்சித் தேர்தலில் தோத்துருக்கோம்னா, நம்மோடு இருக்கும் துரோகிகள்தான் காரணம்'' என காரசாரமாகப் பேசி துரைக்கண்ணுவை கிறுகிறுக்க வைத்தார்.

அடுத்து பேச வந்தார் அமைச்சர் துரைக்கண்ணு. “நம்மளோட ஆட்சி நல்ல ஆட்சின்னு மத்திய அரசே சர்டிபிகேட் கொடுத்துருச்சு. இன்னும் 100 வருசம் நம்மளோட ஆட்சிதான்'' என படபடப்புடன் பேசி முடித்தார் அமைச்சர்.

இறுதியாக மைக் பிடித்த மாஜி வைத்திலிங்கம், "கட்சியில் இருக்கும் அத்தனைபேரும் மனசாட்சியுடன் செயல்படவேண்டும். சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணுன்னு இருக்கக்கூடாது. எதிரிகளை ஜெயித்துவிடலாம், ஆனால் நம்முடன் இருக்கும் துரோகிகளை ஜெயிக்க முடியாது. எதிரி நேரடியாக தாக்குவான், துரோகி பின்பக்கமாக தாக்குவான்'' என வார்த்தைக்கு வார்த்தை "துரோகி' எனச் சொல்லி மைக்கையே மயக்கமடைய வைத்தார்.


"ஏன் இந்த களேபரம், எதற்கு இந்த துரோக வெறி?'' என தஞ்சை நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "மைக்கைப் பார்த்தா போதும் அமைச்சர்கள் எல்லோரும் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டி கட்சியின் இமேஜை டேமேஜ் பண்ணிக்கிட்டிருக்காங்க. அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டும் பெருகுது. இந்த வகையில் துரைக்கண்ணு நாலாவது இருக்கார். இது போக அமைச்சரின் மூத்த மகன் பாண்டியன், அக்ரி டிபார்ட்மெண்டில் புகுந்து விளையாடுகிறார், இரண்டாவது மகன் ஐயப்பன் மற்ற டீலிங்குகளையும், மகள் சந்தியா -மருமகன் சபரீசன் ஆகியோர் கட்சிக்குள் அக்கப்போர் பண்ணிவருகிறார்கள்.

தனது சமூகத்தைச் சேர்ந்த முருகன் கஃபே முருகானந்தம், அம்மா பேரவை து.செ.செந்தில், திருவிடைமருதூர் அசோக்குமார், திருவலஞ்சுழி சுபா அறிவழகன் ஆகியோரின் வளர்ச்சிக்குப் பாடுபடும் அமைச்சரால் மற்ற சமூகத்தினர் ரொம்பவே நொந்துகிடக்கிறார்கள். காண்ட்ராக்ட் வேலைகளைக் கூட தி.மு.க.வில் இருக்கும் தனது சமூகத்தின் முக்கியப் புள்ளி ஒருவருக்குத்தான் கொடுக்கிறார்'' என புலம்பித் தள்ளினார்.

நாம் அமைச்சரைத் தொடர்பு கொண்டபோது, "எனக்கு எதிரா நோட்டீசா, அப்படியா? கூட்டம் நல்லபடியா முடிஞ்சுது'' என்றார் சிம்பிளாக. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.