முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புகார் கொடுத்தனர். இதையடுத்து புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார்.

Advertisment

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பேரவைத் தலைவர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.

நீதிபதி எம்.சுந்தர் தனது தீர்ப்பில், இயற்கை நியதிக்கு எதிராக பேரவைத் தலைவர் முடிவு எடுத்துள்ளார். தகுதி நீக்கம் செய்வதற்கு முன் 18 பேருக்கும் போதிய வாய்ப்பு தரப்படவில்லை. எனவே, பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டார்.

Advertisment

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கை 3வது ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும். இதையடுத்து, எம்.சத்யநாராயணனை 3வது நீதிபதியாக நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்குகளை விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 31ம் தேதி தள்ளிவைத்தார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் 3வது நீதிபதி தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி, வக்கீல் திருமாறன் ஆஜராகி வாதிட்டனர்.

சட்டப்பேரவைத் தலைவர் தனபால் மற்றும் முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், 18 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என வாதிட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, உட்கட்சி விவகாரம் என்பதால், 18 பேருக்கு எதிராக கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியாது என்று வாதிட்டார்.