Skip to main content

"அதிமுகவிலிருந்து உண்மை தொண்டர்கள் வெளியேற்றப்படுவது நல்லதற்கல்ல" - பண்ருட்டி எம்.எல்.ஏ 

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

ADMK Banrooti MLA dismissed from party

 

2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு சீட் வழங்காமல் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசியலிலிருந்து விலகுவதாக சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு, தேர்தல் பணிகளில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தனர்.

 

அதேசமயம், கட்சிப் பொறுப்பில் இருந்த பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் செளந்தர், வீரப்பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராம்குமார் ஆகியோர் கட்சி வேலைகள் செய்யாமல் இருந்ததுடன், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியதாகவும் கூறி, கடந்த 10-ஆம் தேதி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் சத்யா பன்னீர்செல்வம், பன்னீர்செல்வம் மற்றும் பெருமாள், மார்ட்டின் லூயிஸ், சௌந்தர், ராம்குமார் ஆகியோர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

 

இதையடுத்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் அவரது கணவரும், பண்ருட்டி நகரமன்ற முன்னாள் தலைவருமான பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, "தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டுவிட்டோம். அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலேயே இல்லை. ஒவ்வொரு கோயிலாக இறைவனை தரிசிக்க ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலேயே இல்லாத நிலையில், கழகத்திற்கு எதிராகவோ, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்? நாங்கள் கழகத்திற்கு எதிராக எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பது பண்ருட்டி தொகுதி முழுக்க உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், தொகுதி மக்கள் உள்பட அனைவருக்குமே தெரியும். இதற்கு நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் சாட்சி. 

 

இந்நிலையில், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகிய நாங்கள் கழக வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக அபாண்டமான, பொய்யான குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தியதுடன் எங்களுடன் நகர, ஒன்றியச் செயலாளர்கள் உள்பட நால்வரை கழகத்திலிருந்து நீக்குவதாக தலைமைக் கழகம் அறிவித்திருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. கடலூர் அமைச்சர் சம்பத், சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உளவுத்துறையை தன் கையில் வைத்திருக்கும் எடப்பாடியார் காவல்துறை அறிக்கையைக் கேட்டு பெற்று இருந்தாலே உண்மை தெரியும். அல்லது, எங்களையோ பண்ருட்டி தொகுதி கழகத்தினரையோ அழைத்துப் பேசியிருந்தாலோ உண்மை தெரிந்திருக்கும். கண்டிப்பாக இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பால் எங்கள் மீது பொய்யான பழி சுமத்தப்பட்டதோடு எங்களைப் போன்ற அம்மாவின் உண்மையான விசுவாசிகளின் மனதைப் புண்படுத்தியுள்ளார்கள். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும். 

 

அம்மா இருந்திருந்தால் எங்களைப் போன்ற கழக விசுவாசிகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையாகவே கழக விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அரசியல் சூனியக்காரர்களான கடலூர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர்களை நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. கழகத்திற்கு விசுவாசமான, உண்மை தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்தப் படுபாதகர்கள் விரைவில் நாசமாகப் போவார்கள். 

 

தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களைப் போன்ற உண்மையான அம்மா விசுவாசிகளை கழகம் இழந்துகொண்டே போனால் கழகத்தின் நிலை? பொறுத்திருப்போம். காலம் பதில் சொல்லும். இந்தச் செயல்பாடு விதி என்றிருப்போம். நல்லோர்க்கு நல்லதே நடக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் நகர்மன்றத் தலைவரின் இந்த அறிக்கை கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.