Skip to main content

"அதிமுகவிலிருந்து உண்மை தொண்டர்கள் வெளியேற்றப்படுவது நல்லதற்கல்ல" - பண்ருட்டி எம்.எல்.ஏ 

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

ADMK Banrooti MLA dismissed from party

 

2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு சீட் வழங்காமல் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசியலிலிருந்து விலகுவதாக சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு, தேர்தல் பணிகளில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தனர்.

 

அதேசமயம், கட்சிப் பொறுப்பில் இருந்த பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் செளந்தர், வீரப்பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராம்குமார் ஆகியோர் கட்சி வேலைகள் செய்யாமல் இருந்ததுடன், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியதாகவும் கூறி, கடந்த 10-ஆம் தேதி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் சத்யா பன்னீர்செல்வம், பன்னீர்செல்வம் மற்றும் பெருமாள், மார்ட்டின் லூயிஸ், சௌந்தர், ராம்குமார் ஆகியோர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

 

இதையடுத்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் அவரது கணவரும், பண்ருட்டி நகரமன்ற முன்னாள் தலைவருமான பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, "தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டுவிட்டோம். அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலேயே இல்லை. ஒவ்வொரு கோயிலாக இறைவனை தரிசிக்க ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலேயே இல்லாத நிலையில், கழகத்திற்கு எதிராகவோ, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்? நாங்கள் கழகத்திற்கு எதிராக எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பது பண்ருட்டி தொகுதி முழுக்க உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், தொகுதி மக்கள் உள்பட அனைவருக்குமே தெரியும். இதற்கு நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் சாட்சி. 

 

இந்நிலையில், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகிய நாங்கள் கழக வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக அபாண்டமான, பொய்யான குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தியதுடன் எங்களுடன் நகர, ஒன்றியச் செயலாளர்கள் உள்பட நால்வரை கழகத்திலிருந்து நீக்குவதாக தலைமைக் கழகம் அறிவித்திருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. கடலூர் அமைச்சர் சம்பத், சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உளவுத்துறையை தன் கையில் வைத்திருக்கும் எடப்பாடியார் காவல்துறை அறிக்கையைக் கேட்டு பெற்று இருந்தாலே உண்மை தெரியும். அல்லது, எங்களையோ பண்ருட்டி தொகுதி கழகத்தினரையோ அழைத்துப் பேசியிருந்தாலோ உண்மை தெரிந்திருக்கும். கண்டிப்பாக இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பால் எங்கள் மீது பொய்யான பழி சுமத்தப்பட்டதோடு எங்களைப் போன்ற அம்மாவின் உண்மையான விசுவாசிகளின் மனதைப் புண்படுத்தியுள்ளார்கள். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும். 

 

அம்மா இருந்திருந்தால் எங்களைப் போன்ற கழக விசுவாசிகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையாகவே கழக விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அரசியல் சூனியக்காரர்களான கடலூர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர்களை நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. கழகத்திற்கு விசுவாசமான, உண்மை தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்தப் படுபாதகர்கள் விரைவில் நாசமாகப் போவார்கள். 

 

தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களைப் போன்ற உண்மையான அம்மா விசுவாசிகளை கழகம் இழந்துகொண்டே போனால் கழகத்தின் நிலை? பொறுத்திருப்போம். காலம் பதில் சொல்லும். இந்தச் செயல்பாடு விதி என்றிருப்போம். நல்லோர்க்கு நல்லதே நடக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் நகர்மன்றத் தலைவரின் இந்த அறிக்கை கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.