Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்; அடித்து ஆடிய 86 வயது பாட்டி! ஆட்டம் கண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

90 years old lady Perumathal won in local body election in sivanthipatti

 

பாளையை ஒட்டியுள்ள அதன் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி சிவந்திபட்டி. அடிப்படையிலிருந்து தற்போது வரையிலும் விவசாயத் தொழிலைக் கொண்ட கிராமம். இங்குள்ள விவசாய குடும்பமான சுப்பையா குடும்பம் சிவந்திபட்டி உட்பட சுற்றுப்பட்டுக் கிராமத்திலும் அறிமுகமானது. இவரது மனைவி தான் 86 வயதுடைய பெருமாத்தாள் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் இந்த மூதாட்டி பஞ்.தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பெண் வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

 

இந்தத் தம்பதியருக்கு இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள் என்ற அளவிலான பெரியகுடும்பம் கணவர் காலமான பின்பும் விவசாயத் தொழிலைத் திறமையாகச் செய்து வந்திருக்கிறார் பெருமாத்தாள். இவரது மகன்களில் ஒருவரான தங்கப்பாண்டியன் தி.மு.க.வின் பாளை ஒன்றிய செயலாளர் அனைவரும் ஏகமாக சிவந்திபட்டியிலேயே குடியிருப்பவர்கள்.

 

இதன் பஞ்சாயத்துத் தலைவராகத் தங்கப்பாண்டியனின் மூத்த சகோதரர் இரண்டு முறையும் அடுத்துத் தங்கப்பாண்டியன் மூன்று முறையும் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் செய்தவர்கள் குறிப்பாகத் தங்கபாண்டியன் தன்னுடைய பதவிக் காலத்தில் ஊராட்சிப் பகுதிக்குத் தேவையான வீடு தோறும் குடிநீர் வசதி, கழிவுநீர் செல்லும் வாறுகால் சுகாதாரம், சாலை பேருந்து வசதி என அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததால் தலைவராகியிருக்கிறார்கள்.

 

90 years old lady Perumathal won in local body election in sivanthipatti

 

தற்போதைய நிலையில் சுமார் 2800 வாக்குகளைக் கொண்ட சிவந்திபட்டியின் தலைவர் பதவி பொது பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால் இம்முறை இந்தக் குடும்பத்திலிருந்து 86 வயது மூதாட்டியும், தங்கபாண்டியனின் தாயாருமான பெருமாத்தாள் வேட்பாளராகியிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட செல்வராணி உமா இருவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 86 வயது என்றாலும் பெருமாத்தாள் இன்றளவும் தளர்ந்து விடவில்லை. ஆரம்பக்காலம் தொட்டே கால்நடையாகச் சென்று வயலில் வேலை செய்து விட்டு பொழுது அடங்க வீடு திரும்பும் பெருமாத்தாள் திடகார்த்தமாகவே இருக்கிறார். தனியாகவே விவசாயப் பணிகளைச் செய்கிறார். அதனால் இன்று வரை தெம்பும் ஆரோக்கியமுமாக இருக்கிறார்.

 

தன் குடும்பத்தாருடன் வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்டார். “எம் புள்ளைக பிரசிடெண்ட்டாயிருக்கும் போது ரோடு, பஸ்சு, குடிதண்ணி வசதி கொண்டாந்தாங்க. அதுமாதிரி நான் ஊருக்கு வேண்டிய வசதிகளைச் செஞ்சு குடுப்பேன்” என்று திடமாகப் பேசி வாக்கு சேகரித்தார். அனைவரும் தெரிந்த பழகியவர்கள், என்பதால் தினமும் காலை, மாலை எனச் சளைக்காமல் சென்று வாக்கு சேகரித்தார். விளைவு வெற்றி பெருமாத்தாளுக்குச் சாதகமாகியிருக்கிறது. 2160 வாக்குகள் பதிவானதில் பெருமாத்தாள் 1568 வாக்குகள் பெற்று வெற்றி பெற எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் டெபாசிட்டை இழக்க நேரிட்டுள்ளது. குறிப்பாக இதன் ஊராட்சிக்குட்பட்ட 342 வாக்குகளைக் கொண்ட பற்பநாதபுரம் கிராமத்தின் 310 வாக்குகள் பெருமாத்தாளுக்கு கிடைத்திருக்கிறது.

 

ad

 

இதுகுறித்து பெருமாத்தாள் கூறுகையில், “எங்க ஊர்ல எல்லா சனங்களும் வித்தியாசமில்லாம உறவு முறைய வச்சுப் பழகுவோம்யா. ஒத்துமையா இருப்போம். இங்க உள்ள எல்லாக் குடும்பங்களுக்கும் நான் போய் வந்து பழகியிருக்கேன். என்னையத் தெரியாதவங்களே இல்ல. எம் புள்ளைக நம்ம ஊருக்கு என்ன செஞ்சாங்களோ அதப்போல ஒரு குறையுமில்லாம நான் செய்வேன்னு மக்க கிட்டச் சொல்லி வோட்டு கேட்டேன். என்னைய நம்பி வோட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிறுக்காக. அதுக்கு நா, விசுவாசமாயிருப்பேம்யா” என்கிறார் பெருமாத்தாள் தெம்பாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.