Skip to main content

ஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்! தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

70 crore development work in seven days


தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 75 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அமைச்சரவையில் சீனியர்களைவிட ஜூனியர்களுக்குப் பல முக்கிய துறைகளைக் கொடுத்து களமிறக்கியிருக்கிறார். அதோடு அமைச்சர்கள் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உளவுத்துறை மூலம் அமைச்சர்களின் செயற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டுவருகிறார்.

 

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற சக்கரபாணிக்கு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். கட்சிக்காக முப்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்துக்கொண்டு, தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வந்ததின் மூலமே தொடர்ந்து ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக சக்கரபாணி வெற்றிபெற்றார். அதன் அடிப்படையில்தான் ஸ்டாலினும் தனது அமைச்சரவையில் இடம் கொடுத்தார். அதோடு கொங்கு மண்டலத்தில் பரவிவந்த கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் சக்கரபாணியை களமிறக்கினார். அதன் மூலம் இரவு பகல் பாராமல் அதிகாரிகளைக் கொண்டு கரோனா தடுப்புப் பணியில் தீவிரம் காட்டி கட்டுப்படுத்தினார். கரோனாவிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து தனது துறையில் தீவிரம் காட்டிய சக்கரபாணி, டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்து, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். அதோடு ரேஷன் கடைகளுக்கும் விசிட் அடித்து ஆய்வு செய்ததுடன் மட்டுமல்லாமல், அங்கு வந்த பொதுமக்களிடம் பொருட்கள் தரமாகவும் எடை குறையாமலும் கிடைக்கிறதா என்று கேட்டு அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவருகிறார். 

 

70 crore development work in seven days

 


அதோடு கடந்த ஒருவாரமாக ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கேதையுறும்பு, புளியமரத்துக்கோட்டை, யோகிபட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, குத்திலைப்பு உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளிலும், அதுபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கள்ளிமந்தையம், கூத்தாம்பாறை, கரியாப்பட்டி, புதூர், தேவத்தூர், கொத்தையம், பொருளூர், கீரனூர், மானூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளிலும் குடிநீர் மேல்நிலை தொட்டி, தரம் உயர்த்தப்பட்ட சாலைகள், சமுதாயக்கூடம், காவேரி கூட்டுக் குடிநீர், கலையரங்கம், ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி, சாக்கடை, கழிப்பறை, பள்ளிகளில் தடுப்புச் சுவர்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூ. 70 கோடி வரை ஒதுக்கீடு செய்து, பூமிபூஜையும் போட்டு பணிகளை அங்கங்கே தொடங்கிவைத்தார். 

 

70 crore development work in seven days

 

அதுபோல் தனது எம்.எல்.ஏ. நிதி மூலம் கீரனூரில் கட்டப்பட்ட இலவச ஆம்புலன்ஸ் சேவை, சமுதாயக் கூடம், சுகாதார மையம் உள்பட சில புதிய கட்டடங்களையும் திறந்துவைத்தார். இப்படி ஒரே வாரத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இரண்டு ஒன்றியம் மற்றும் நகரத்தில் ரூ. 70 கோடிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்ததைக் கண்டு தொகுதி மக்களே அசந்துபோய்விட்டனர்.

 

70 crore development work in seven days

 

இது சம்பந்தமாக ஒன்றிய பொறுப்பிலுள்ள சில உ.பி.களிடம் கேட்டபோது, “இத்தொகுதியைத் தொடர்ந்து எங்க அமைச்சர் சக்கரபாணி தக்கவைத்து வருவதாலேயே கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தொகுதி வளர்ச்சிப் பணிகள் சரிவர செய்ய முடியாமல் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். அப்படியிருந்தும் அமைச்சர், தொகுதி மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி, அடிப்படை வசதிகளை ஓரளவுக்குப் பூர்த்திசெய்து கொடுத்தார். தற்போது தலைவர் ஸ்டாலின் முதல்வராக வந்ததின் மூலம் அண்ணன் சக்கரபாணி அமைச்சராகிவிட்டதால் தொகுதியில் உள்ள அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தொடங்கிவைத்ததுடன் மட்டுமல்லாமல் மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் போட்டு, தொகுதி வளர்ச்சிப் பணிகளைக் கூடிய சீக்கிரம் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதை அடுத்த ஆய்வுக் கூடத்தில் தெரியப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவும் போட்டிருக்கிறார். அதனாலேயே அதிகாரிகளும் அசுர வேகத்தில் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். அதோடு மாவட்ட அளவில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளையும் தொடங்கிவைத்திருக்கிறார்” என்று கூறினார்கள்.

 

ஆக, ஸ்டாலின்  அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் சக்கரபாணியின் செயல்பாடு என்பது  துறை ரீதியாகவும் தொகுதி வளர்ச்சிப் பணி மூலமும்  மக்கள் பாராட்டுக்குரியவராக இருந்துவருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.