Skip to main content

“30,000 பேருக்கான வாய்ப்பு பறிபோயுள்ளது” - திருமாவளவன் எம்.பி

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

10 thousand more jobs through TNPSC - Thirumavalavan instructs

 

2022 ஆம் ஆண்டு சுமார் 10,000 குரூப் - 4 காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023 இல் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்துள்ளது.

 

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Group 4) நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.

 

வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால், கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000  பேருக்கான வாய்ப்பு பறிபோயுள்ளது. இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார். 

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி; டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Mikjam Storm Echo TNPSC Important Notification

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

 

அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் (04.12.2023 மு.ப. & பி.ப. மற்றும் 06.12.2023 மு.ப.) உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, மிக்ஜம் புயல் காரணமாக திங்கட்கிழமை (04.12.2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

 

இதனால் நேர்முகத்தேர்வு நாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் திங்கட்கிழமை (04.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு புதன் கிழமைக்கும் (06.12.2023), புதன் கிழமை (06122023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு  வியாழக்கிழமை (07,12,2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே திங்கட்கிழமை (04122023) அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (06.12.2023) அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும் புதன் கிழமை (06.12.2023) அன்று தடைபெறவுள்ள தேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சி” - அன்புமணி கண்டனம் 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

TNPSC Issue anbumani statement

 

“தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு அதிகாரிகளையும், பணியாளர்களையும் தேர்ந்தெடுத்து வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தலைவர், செயலாளர் மற்றும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டிய அமைப்பை அரசு முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது” என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

 

மேலும் அவரது அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் இல்லை. 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய நிலையில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவரான முனியநாதன் என்பவர் தான் இப்போது பொறுப்புத் தலைவராக இருக்கிறார். அவரும், மற்றொரு மூத்த உறுப்பினருமான முனைவர் ஜோதி சிவஞானமும் முறையே வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஓய்வு பெறவுள்ளனர். அதன்பின் இரு உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள்.

 

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த கா.பாலச்சந்திரன் கடந்த 09.06.2022 அன்று ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து  மூத்த உறுப்பினர்கள் பி.கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலுசாமி ஆகியோர் கடந்த 19.04.2023-ஆம் நாளுடன் ஓய்வு பெற்றனர். ஆணையத்தில் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய நிலையில், 6 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிலும் இருவர் ஓய்வு பெற்று விட்ட சூழலில், அவர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்; புதிய தலைவரும் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான முறையான நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தொடங்கக்கூட இல்லை. தங்களுக்கு சாதகமானவர்களை அந்தப் பொறுப்புகளில் நியமிக்க, விதிகளுக்கு மாறாகவும், நடைமுறைகளுக்கு எதிராகவும் அரசால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

 

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஓய்வு பெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இல்லை. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்ட பொறுப்பு, ஆணையத்தின் செயலாளர் பொறுப்பு ஆகும். 23.06.2021 ஆம் நாள் முதல் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த உமாமகேஸ்வரி அவர்கள் கடந்த நவம்பர் 21-ஆம் நாள் வணிகவரித்துறை இணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், அதற்கான முறையான அறிவிப்பு கூட இதுவரை வெளியிடப்படவில்லை. மற்றொருபுறம் ஆணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வரும் அஜய் யாதவ் விடுப்பில் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்படியாக தலை, மூளை, இதயம், கை, கால்கள் என இயக்கத்திற்கான எந்த உறுப்புகளுமே இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது ஆணையம்.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மிக முக்கியமான அரசியலமைப்பு சட்ட நிறுவனம் ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் 315-ஆவது பிரிவின்படி உருவாக்கப்பட்டது. ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 315 முதல் 320 வரையிலான பிரிவுகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் கடமைகள் செவ்வனே நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அப்பணிகள் எதையுமே செய்ய முடியாமல், பணியாளர் தேர்வாணையம் முடங்கிக் கிடக்கிறது.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் எந்த அளவுக்கு முடங்கிக் கிடக்கின்றன என்பதற்கு சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசுத்துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க 2022-ஆம் ஆண்டில் 37 அறிவிக்கைகள், 2019-ஆம் ஆண்டில் 34 அறிவிக்கைகள், 2018-ஆம் ஆண்டில் 39 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், 2023-ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இதுவரை 19 ஆள்தேர்வு அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 4217 மட்டுமே. தேர்வாணைய வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது இந்த ஆண்டாகத் தான் இருக்கக்கூடும்.

 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த அளவுக்கு முடங்கிக்கிடப்பது தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் அரசு நிர்வாகமும் முடங்கிவிடக் கூடும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியானவர்களை முறைப்படி நியமிக்க வேண்டும். ஆணையத்திற்கு புதிய செயலாளரையும் உடனே நியமித்து தேர்வாணையம் முழு அளவில் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்