Skip to main content

ஆந்திரா முதல்வர் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்திய புதிய கட்சி!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

jagan mohan reddy

 

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. ஒன்றிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மகனான இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து முதல்வரானார். ஜெகன் மோகனின் இந்த அரசியல் பயணத்தில் அவருக்கு அவரது தங்கை ஷர்மிளா உறுதுணையாக இருந்தார்.

 

இந்த சூழலில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான பிறகு, கட்சியில் தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டுமெனவும், தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டுமெனவும் அவரது தங்கை ஷர்மிளா கோரியதாகவும், இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் ஷர்மிளா, தனது தந்தை பெயரில் தெலங்கானாவில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் அவருக்கும் ஷர்மிளாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை நின்றவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, எப்போதும் ரக்ஷா பந்தன் அன்று ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து ராக்கி கட்டும் ஷர்மிளா, இந்தமுறை ட்விட்டரில் மட்டும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

 

அதேநேரத்தில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மனைவியும், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளாவின் தாயாரான விஜயலட்சுமி, தனது மகளின் பக்கமே நிற்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 12ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி, இன்று (02.09.2021) அஞ்சலி கூட்டம் ஒன்றுக்கு விஜயலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு சுமார் 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

ஆனால் இந்தக் கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்ள போவதில்லை என ஆந்திர முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தை நினைவிடத்தில் தனியாக அஞ்சலி செலுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் தனது தாயார் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் ஷர்மிளா கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

தனது தாயார் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளாததன் மூலம், ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது தாய் மற்றும் தங்கைக்குமிடைய விரிசல் ஏற்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் கவுரவ தலைவராக இருக்கும் விஜயலட்சுமி அப்பதவியில் இருந்து விரைவில் விலகுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.