Skip to main content

ரீல்ஸ் மோகம்; சாலையில் கட்டுக்கட்டாக பணத்தை பறக்கவிட்ட இளைஞர்!

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 youth threw money on the road to make instagram reels

 

பரபரப்பான சாலையில் புகுந்த சொகுசு காரிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து அள்ளி வீசும் மர்ம நபரின் வீடியோ காட்சிகள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதிக்கு அருகே உள்ளது கோல்ஃப் கோர்ஸ் சாலை. இது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால், எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி இரவு 9 மணியளவில், திடீரென அந்த பகுதிக்குள் புகுந்த விலை உயர்ந்த வெள்ளை நிற கார் ஒன்று கோல்ஃப் கோர்ஸ் சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த சொகுசு காரின் டிக்கியில் இருந்து முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், திடீரென காருக்குள் இருந்த கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகளை எடுத்து நடுரோட்டில் வீசினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் அந்த காருக்குள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் சில நொடிகள் திகைத்துப் போனார்கள். இதனால், சிறிது நேரத்திற்கு அந்த இடம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

 

மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவத் தொடங்கியது. பின்னர் இதையறிந்த குருகிராம் போலீசார், ‘நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை வீசியது யார்? அதற்கான காரணம் என்ன?’ எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதன்பிறகு சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து சோதனை செய்ததில் அவை அனைத்தும் போலியானவை எனத் தெரிய வந்துள்ளது. அதே சமயம், சாலையில் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் பிரபல யூடியூபரான ஜோரவர் சிங் கல்சி தான் என்பது தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து, தலைமறைவாக இருந்த யூடியூபரை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "சமீபத்தில் வெளியான ‘Farzi' என்கிற வெப் சீரிஸில், நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை வீசிச் செல்வது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த அக்காட்சியை ரீல்ஸ் செய்வதற்காகவே இவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக” தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.