Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; நண்பனைக் குத்திக் கொலை செய்த இளைஞர்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Youth incident  friend in Puducherry

 

புதுச்சேரி மாநிலம் குருசுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். 24 வயதான இவர், செல்லப்பிராணிகளான நாய்களை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகன் தேவாவும், முகுந்தனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். முகுந்தன் எங்கு சென்றாலும் தனது நண்பனான தேவாவை, தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

 

இத்தகைய சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, முகுந்தன் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ரம்யாவிற்கு தாய், தந்தை என யாரும் இல்லை. ரம்யாவை அவருடைய சித்தி கோமதி தான் வளர்த்து வந்தார். ஆனால், கோமதியோ கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். ஆரம்பத்தில், ரம்யாவுடன் வசித்து வந்த கோமதி தன் மகளுக்குத் திருமணம் ஆனதால் தனிமையில் வாழ வேண்டிய சூழல் உருவானது.

 

இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட  முகுந்தன் - ரம்யா தம்பதியினர் கோமதிக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அந்த சமயத்தில், தனது நண்பனான தேவா, அடிக்கடி முகுந்தனின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி அவன் வீட்டிற்கு வரும் சமயத்தில் தேவாவுக்கும் கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் உறவாகவும் மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

 

ஒருகட்டத்தில், இந்த திருமணத்தை மீறிய உறவு விவகாரம் முகுந்தனுக்கும் ரம்யாவுக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகுந்தன், தனது நண்பனான தேவாவை கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, இனிமேல் தன்னுடைய மாமியார் கோமதியுடன் பேசக்கூடாது எனத் திட்டித் தீர்த்துள்ளார். ஆனால், இது தேவாவுக்கு வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அதே நேரம், இதையெல்லாம் கண்டுகொள்ளாத தேவா, கோமதியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இத்தகைய சூழலில், கடந்த 12 ஆம் தேதியன்று முகுந்தனும் ரம்யாவும் சினிமாவிற்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட கோமதி, தேவாவை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. உடனே, தேவாவும் வீட்டிற்கு வர, இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதற்கிடையில், சினிமாவிற்கு சென்ற முகுந்தன் - ரம்யா தம்பதி தங்களுடைய வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த தேவா அவர்களிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.

 

ஒருகட்டத்தில் கோபமடைந்த முகுந்தன், தேவாவிடம் தகராறு செய்துள்ளார். அந்த சமயத்தில், அங்கிருந்த ரம்யாவும் கோமதியும் பிரச்சனையைத் தடுக்க முயன்றனர். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.  அப்போது ஆத்திரமடைந்த தேவா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், முகுந்தன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய தேவாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே, அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு தேவா மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

 

தற்போது, மாமியாரின் திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக் கேட்ட மருமகன், உடன் பழகிய நண்பனால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.