Skip to main content

சிறுமியை 20 முறை குத்திக் கொடூரமாக் கொலை செய்தது ஏன்? - இளைஞர் பகிர் வாக்குமூலம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

  youth has given a statement as to why he brutally incident girl by stabbing him 20 times

 

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, அவரது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை மறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 20 முறைக்கு மேல் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த பெண்ணின் தலையில் பெரிய கல்லை தூக்கிப் போட்டு கொடூரமாகக் கொன்றுள்ளார். இதனைப் பக்கத்தில் இருப்பவர்கள் தடுக்க முயலும்போது அவர்களை அந்த இளைஞர் மிரட்டியதால், அவர்களும் ஒதுங்கிப் போயுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. மேலும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர் அதே பகுதியில் உள்ள ஜே.ஜே காலனியைச் சேர்ந்தவர் என்றும், கொலை செய்தவர் சாகல் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து சாகலை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில் உ.பியில் புலந்த்சாஹர்  நாகரில் உள்ள தனது அத்தை வீட்டி பதுங்கியிருந்துள்ளார். தனது செல்போனை ஸ்விச் ஆஃப் செய்த சாகல் தனது அத்தை செல்போனில் இருந்து டெல்லியில் உள்ள தனது தந்தைக்கு ஃபோன் செய்துள்ளார். இதனை அறிந்த டெல்லி போலீஸ் உ.பி விரைந்து சென்று சகிலை கைது செய்தது. 

 

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், “நான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அந்த பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். ஆனால் அந்த பெண் வேறு சில இளைஞர்களுடன் பேசி பழகி வந்துள்ளார். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது தொடர்பாக எனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. மேலும் அந்த பெண் தனது கையில் பிரவீன் என்ற இளைஞரின் பெயரை பச்சை குத்தியுள்ளார். இதுபற்றி கேட்டபோது அவர் சரியான பதில் எதுவும் சொல்லவில்லை. அதோடு மட்டுமில்லாமல் என் காதலையும் உதாசீனப்படுத்தினார். அதனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொலை செய்யத் திட்டமிட்டு சம்பவத்தன்று அவரை, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாகல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.