இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் கேட்டு பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இந்நிலையில் அனைத்து தரவுகளையும் ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.