Skip to main content

காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு; போலீஸார் அதிரடி இடமாற்றம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Woman set on fire in front of police station in puducherry

 

புதுச்சேரி, பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (38). இவருடைய மனைவி கலைச்செல்வி (35). இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் கொடுத்துள்ளனர். இந்த கடன் தொகையை சந்திரன் - கலைச்செல்வி தம்பதியினரிடம் கொடுக்காமல் ஏழுமலை காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று முன் தினம் சந்திரன் தனது மனைவியோடு ஏழுமலை வீட்டுக்குs சென்றுள்ளார். அங்கு, பணத்தை திருப்பித் தரும்படி சந்திரன் ஏழுமலையிடம் கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் ஏழுமலைக்கும், சந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பணத்தை தரக்கூறி தன்னை மிரட்டுவதாக ஏழுமலை காலாப்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார்.

 

அந்த புகாரை விசாரித்த காவல்துறையினர், சந்திரனையும் கலைச்செல்வியையும் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு பணம் வாங்கிய ஏழுமலையை காவல்துறையினர் நாற்காலியில் அமர வைத்தும், சந்திரன் மற்றும் அவரது மனைவியை நிற்க வைத்தும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி, காவல் நிலைய வாசலில் நின்று கொண்டு தனது வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கலைச்செல்வியை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

 

தகவல் அறிந்து காவல்நிலையத்துக்கு வந்த சந்திரனின் உறவினர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு  மற்றும் போலீஸார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, தம்பதியினரின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, காலாப்பட்டு எஸ்.ஐ. இளங்கோ, துணை உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் ஆயுதப் படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

புதுச்சேரியில் ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்துள்ளது பங்கூர். அந்த பகுதியில் பிரபு என்பவர் ஷங்கர் ஒயின்ஸ் என்ற தனியார் ஒயின்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பத்து மணிக்கு அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், ஒருவர் கீழே இறங்கி கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை கடையின் மீது வீசினார். அது பயங்கர சட்டத்துடன் வெடித்துச் சிதறியது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். விசாரணையில், நாட்டு வெடிகுண்டு வீசியது அதியூர் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பது தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள இளைஞர் செல்வாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

Next Story

தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மழை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Rain for 7 days in Puducherry, Tamil Nadu

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று (26.11.2023) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நாளை (27.11.2023) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. நாளை உருவாகும் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வரும்.

 

இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 29 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதே சமயம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நாளை மறுநாளுக்குள் (28.11.2023) கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.