Skip to main content

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது! 

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

Woman arrested for defrauding millions by claiming to send her to work abroad!


புதுச்சேரியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் இணையதளத்தில் வேலை தேடினார். அதில் கிடைத்த தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசியவர் அயர்லாந்து நாட்டில் பிரபல நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரி பணி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3.5 லட்சம் கேட்டுள்ளார். அதன்பேரில் போனில் பேசிய நபர் கூறிய வங்கி கணக்கில் அந்த பெண் கூகுள் பே மூலம் 3.5 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து போன் நம்பரில் கூறியபடி, அந்த பெண் நேர்காணலுக்கு டெல்லிக்கு சென்று விசாரித்தபோது அப்படி ஒரு அலுவலகமே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், பணம் பெற்ற நபரை ஃபோனில் தொடர்புக் கொண்டு கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இதுகுறித்து அந்த பெண் புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜிடம் கடந்த செப்டம்பர் 20- ஆம் தேதி அன்று புகார் அளித்தார். இதையடுத்து, டி.ஜி.பி. உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு எஸ்.பி நாராயண் மேற்பார்வையில், எஸ்.பி பழனிவேல் தலைமையில், சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, ஏழுமலை உள்ளிட்ட 10 பேர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்

 

விசாரணையில் கோவையில் பதுங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த நாகம்மை (வயது 47) என்பவரை நேற்று முன்தினம் (23/09/2022) கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் நாகம்மை மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 10 பேரிடம் ரூபாய் 45.5 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

Woman arrested for defrauding millions by claiming to send her to work abroad!

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகம்மையிடம் இருந்து போலி பாஸ்போர்ட், விசா, முத்திரை, அரசு ஆவணங்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் நாகம்மையை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

 

இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய நாகம்மை மகன் பிரபாகரனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகம்மை மற்றும் தலைமறைவாக உள்ள பிரபாகரன் சேர்ந்து கடந்த 2019- ஆம் ஆண்டு சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த 25 பேரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக போலி பாஸ்போர்ட் கொடுத்து மோசடி செய்த வழக்கு கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.