
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து காட்டு யானை தாக்கி பொதுமக்கள் உயிரிழந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதனைத் தடுக்க கேரள வனத்துறையினர் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் காட்டு யானை ஒன்று வீட்டிற்குள் புகுந்து ஒருவரைக் கொன்றுள்ளது. மானந்தவாடி பகுதியில் வீட்டின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த காட்டு யானை ஒன்று, அஜி என்பவரைத் தாக்கிக் கொன்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டுள்ள யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிக்னல் வசதியுடன் யானையைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்த அஜி என்பவரின் உடலை நகர்ப் பகுதியில் வைத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்குதலிலிருந்து எங்களைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அரசு மற்றும் வனத்துறையினரின் அலட்சியத்தின் காரணமாகவே தொடர்ந்து காட்டு யானை தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று கூறி வருகின்றனர்.