பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே; ஆனால் மத்திய, மாநில அரசுகள் விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை.
ரூபாய் 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையைக் குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 70,195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளது. 2026- ஆம் ஆண்டுக்குள் இன்னும் ரூபாய் 37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும்" என்று விளக்கம் அளித்துள்ளார்.