' want to support my sister' - Rahul's decision

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அந்த தொகுதியில் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்தநாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது.

ராகுல் காந்திக்கு தேசத்தை காக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே ராகுல் காந்தியை புரிந்துகொண்டு கேரள மக்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் மக்கள் வருத்தப்படக்கூடாது என கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுதாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Advertisment

14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்யவேண்டுமென்றநிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை அறிவித்துள்ளார். 'ரேபரலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதி மக்களுமே என் மனதுக்கு நெருக்கமானவர்கள். வயநாடு தொகுதி மக்களின் அன்பை மறக்க மாட்டேன். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன்' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்துவயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 'ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இல்லை என்ற உணர்வே வரவிடமாட்டேன். வயநாடு மக்களுக்காக கடினமாக உழைத்து நல்ல பிரதிநிதியாக செயல்படுவேன். நாங்கள் இருவருமே வயநாடு மற்றும் ரேபரலி தொகுதியில் தொடர்ந்து இருப்போம்' என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.