Skip to main content

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஐந்து கோடி நிதியுதவி - ஹரியானா அரசு அறிவிப்பு!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

uttarakhand

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலமே மிதந்து வருகிறது. இந்நிலையில் மழை தற்போது குறைந்துள்ளது. 

இந்த கனமழை தொடர்பான நிகழ்வுகளால், அம்மாநிலத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஐந்து பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப்படை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1300-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையே, உத்தரகாண்டின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான குமான் பகுதியை ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநிலம் முழுவதும் பெரிய சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், இயல்புநிலை திரும்ப சில காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 கோடி ரூபாய் வழங்க புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

 

இந்தசூழலில் இன்று, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று பார்வையிட உள்ளார். இதற்கிடையே ஹரியானா அரசு, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் கோவில் திறப்பு விழா; உத்தரகாண்ட் அரசு உத்தரவு

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Inauguration of Ram Temple; Uttarakhand Govt

உத்தரப் பிரதேசத்தில் உள்ள  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, ஜனவரி 22ஆம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என அங்குள்ள படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22ஆம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் 22ஆம் தேதி மூடப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. மேலும், தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்” - அன்புமணி

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Anbumani said that the central govt should provide funds requested by TN govt without delay

சென்னையில் மழை - வெள்ளம்  பாதித்து ஒரு மாதம் நிறைவு நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், மழை - வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட நிதி மத்திய அரசால் இன்று வரை வழங்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மழை - வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி சென்னை வந்த மத்தியக்குழு 4 நாள் ஆய்வுக்குப் பிறகு டிசம்பர் 14-ஆம் தேதி தில்லி சென்றடைந்தது. ஆய்வு  முடிவடைந்த ஒரு வாரத்திற்குள் பரிந்துரை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்போவதாக மத்தியக் குழு தெரிவித்திருந்தது. ஆனால், மத்தியக்குழு டெல்லி சென்று 20 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ததாக தெரியவில்லை. பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்வதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.

வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக உடனடி உதவியாக ரூ.7,033 கோடி, நிரந்தரப் பணிகளுக்கான உதவியாக ரூ.12,659 கோடி என மொத்தம் ரூ.19,692 கோடி நிதி வழங்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கோரிக்கை. உடனடி உதவி என்பது புயல் - வெள்ளம் பாதித்த ஒரு சில நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய உதவி ஆகும். ஆனால், ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்த உதவியும் வழங்கப்படாததால் மழை - வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேங்கிக் கிடந்த தண்ணீரை வெளியேற்றியது, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பிரிவினருக்கு ரூ.6000 நிதி வழங்கியது போன்றவற்றைத் தவிர வேறு எந்த நிவாரணப் பணிகளையும் தமிழக அரசால் செய்ய முடியவில்லை. நிலைமையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றின் லாபக் கணக்கை தணிக்கை செய்வதற்கு முன்பாகவே லாப ஈவுத்தொகையில் 90 விழுக்காட்டை  இடைக்கால ஈவுத்தொகையாக வழங்க வேண்டும் என்று நிதித்துறை ஆணையிட்டுள்ளது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களும், அவற்றின் சமூகப்பொறுப்புணர்வு பணிகளும் கடுமையாக பாதிக்கப்படக் கூடும். இவை அனைத்திற்கும் காரணம் மத்திய அரசின் நிவாரண உதவி உரிய காலத்தில் கிடைக்காதது தான்.

மத்தியக் குழு அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்து, அதன் பின்னர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூடி, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. அதுவரை வெள்ள நிவாரணப் பணிகளை முடக்கி வைக்க முடியாது. எனவே, தமிழக அரசு கோரிய மழை - வெள்ள நிவாரண உதவியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். மத்தியக் குழுவின் அறிக்கையும், அதன் மீதான ஆய்வும் தாமதமாகும் என்றால், இடைக்கால நிவாரணமாக தமிழகஅரசு கோரிய உடனடி உதவியான ரூ.7,033 கோடியை உடனடியாக வழங்க மத்தியஅரசு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.