Skip to main content

சொந்த கணக்கை பயன்படுத்த மத்திய அமைச்சருக்கு அனுமதி மறுத்த ட்விட்டர்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

ravi shanakar prasad

 

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிகளை அறிவித்தது.

 

இந்தப் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வதற்கான அவகாசம் கடந்த மே 26ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக்கொண்டன.  ஆனால் ட்விட்டர் நிறுவனம், இந்த விதிகளை ஏற்கவில்லை. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியுள்ளது.

 

இந்தநிலையில் தனது சொந்த ட்விட்டர் கணக்கை பயன்படுத்த, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு ட்விட்டர் நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது. ரவி சங்கர் பிரசாத் பகிர்ந்த பதிவு ஒன்று காப்புரிமையை மீறுவதாக, அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமை சட்டத்தின் கீழ் புகார் வந்ததையடுத்து, ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமை சட்டத்தை மீறியதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், எனது கணக்கை அணுக ட்விட்டர் நிறுவனம் எனக்கு ஒரு மணிநேரம் அனுமதி மறுத்தது. அதன்பிறகு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது" என கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "முன் அறிவிப்பின்றி, எனது சொந்த கணக்கை அணுக ட்விட்டர் நிறுவனம் அனுமதி மறுத்தது, இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் 2021-னின் விதிகளை மீறுவது செயல்" எனவும் அவர் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

முடங்கியது 'எக்ஸ்'

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Disabled 'X'

உலக அளவில் எக்ஸ் எனும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பணக்காரரான எலான் மஸ்க்கால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது ட்விட்டர். டிவிட்டருக்கு எக்ஸ் (x ) என பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 'x' வலைத்தளமானது உலகம் முழுவதும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல கோடி பயனர்கள் அவதியுற்று வருகின்றனர்.