Skip to main content

"மக்கள் சொல்லும் போது ராஜினாமா செய்கிறேன்"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Published on 11/04/2021 | Edited on 11/04/2021

 

union home minister election campaign at west bengal

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. அதேபோல் அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 294 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், நான்கு கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 45 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 17- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.

 

திரிணாமூல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் மேற்கு வங்க மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மேற்குவங்கத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றன. இதனால் அனைத்து மாநில மக்களும், இளைஞர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோரின் பார்வை மேற்கு வங்கம் பக்கம் திரும்பியுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் எழுந்துள்ளது. 

 

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஐந்தாம் கட்டத் தேர்தலூக்கானப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க.வின் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 

 

அதன் தொடர்ச்சியாக, பசிர்ஹத் தக்ஷின் என்ற பகுதியில் இன்று (11/04/2021) நடந்த தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நான் ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா தொடர்ந்து கூறி வருகிறார். மக்கள் சொல்லும் போது நான் ராஜினாமா செய்கிறேன். மே- 2 ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தாவுக்கு மக்கள் சிறிய பிரியா விடைக்கொடுத்தால் நன்றாக இருக்குமா? பா.ஜ.க.வுக்கு 200 இடங்களை வழங்கி மம்தாவுக்கு மக்கள் பிரியா விடைக் கொடுக்க வேண்டும்" என்றார்.

 

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட மற்றும் எட்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29- ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகவுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பக்கா பிளான்; பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக களமிறக்கிய பாஜக!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Sandeshkhali Rekha Patra announced as BJP candidate for parliamentary elections

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. இதனையொட்டி பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹட் நாடாளுமன்ற  தொகுதி வேட்பாளராக ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான (தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் போராட்டத்திற்கு பிறகு ஷாஜகான் ஷேக் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பெண்ணான ரேகா பத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரேகாவுக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பாசிர்ஹட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சந்தேஷ்காளி கிராமமும் இந்த தொகுதியில்தான் உள்ளது.

பாசிர்ஹட் நாடாளுமன்ற தொகுதியில் ரேகா பத்ராவுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ரேகாவுக்கு சந்தேஷ்காளி மக்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ரேகா பத்ராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்  ஆளும் கட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.